விஜய்க்கு காங்., நிர்வாகிகள் ஆதரவு? கருத்து கூற மறுத்த கனிமொழி எம்.பி.,

துாத்துக்குடி: தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் எம்.பி.,க்கள் மற்றும் நிர்வாகிகள், த.வெ.க., தலைவர் விஜய்க்கு ஆதரவாக பேசுவது குறித்த கேள்விக்கு, தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி கருத்து கூற மறுத்தார். 'உங்க கனவ சொல்லுங்க' என்ற திட்டத்தை, துாத்துக்குடியில் கனிமொழி நேற்று துவக்கி வைத்தார். அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்டோர், அதில் பங்கேற்றனர்.

பின், கனிமொழி கூறுகையில், “மக்கள் உணர்வை மதித்து, அவர்களை புரிந்து கொண்டு தேவைகளை நிறைவேற்றி தரும் வகையில், 'உங்க கனவ சொல்லுங்க' திட்டம் துவங்கப்பட்டுள்ளது. 'தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்., வெளியேறுகிறதா?' என்ற ஆருடங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் நான் பதில் சொல்ல முடியாது.

“தி.மு.க., கூட்டணியில் உள்ள அத்தனை கட்சிகளும் இன்றும் எங்களோடு தான் இருக்கின்றன. கூட்டணியில் புதிய கட்சிகள் சேருவது தொடர்பாக, தி.மு.க., தலைவரான முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுப்பார்; அது குறித்து நான் எந்த பதிலும் சொல்ல முடியாது,” என்றார்.

இதையடுத்து, 'த.வெ.க., தலைவர் விஜய்க்கு ஆதரவாக, தமிழகத்தில் உள்ள காங்., - எம்.பி.,க்கள் பேசி வருகின்றனரே' என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, பதில் ஏதும் கூறாமல் சிரித்தபடியே கனிமொழி அங்கிருந்து நகர்ந்து சென்றார். உடன் இருந்த அமைச்சர் கீதா ஜீவன், 'இது தொடர்பாக பேச முடியாது; நகருங்கள்' என நிருபர்களிடம் கூறினார்.

Advertisement