கூட்டணி தொடர்பாக பொதுவெளியில் பேசாதீங்க: தமிழக காங்கிரசாருக்கு தடை

சென்னை: 'கூட்டணி தொடர்பாக, காங்கிரசார் பொதுவெளியில் கருத்து சொல்வதை தவிர்க்க வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழகத்தில் காலுான்ற முடியாத பா.ஜ.,வுடன் பிற கட்சிகள் கூட்டணி அமைப்பதற்காக, சாம, பேத, தான, தண்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பயன்படுத்தி வருகிறார்.

பா.ஜ., கூட்டணியில் சேர விரும்பாதவர்கள், வருமான வரித் துறை, மத்திய புலனாய்வுத் துறை, அமலாக்கத் துறை வாயிலாக அச்சுறுத்தப்பட்டு, அக்கூட்டணியில் சேர நிர்ப்பந்தம் செய்யப்படுகின்றனர்.

சமீபத்தில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் கூறியபடி, காங்கிரஸ் அமைத்த ஐவர் குழுவினர், தி.மு.க.,வுடன் முதல் கட்டமாக கூட்டணி பேச்சு நடத்தி உள்ளனர். தமிழகத்தில், காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது.

அகில இந்திய காங்கிரஸ் தலைமையோடு தமிழக காங்கிரஸ் தலைமை கலந்து பேசி முடிவெடுக்க வேண்டிய நிலையில், கூட்டணி குறித்து பொதுவெளியில் காங்கிரஸ் கட்சியினர் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும்.

தமிழக நலனையும் தேசிய நலனையும் பாதுகாக்க வேண்டிய மிகப் பெரிய கடமையும் பொறுப்பும் காங்கிரசுக்கு இருப்பதை சிந்தித்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement