125 நாள் வேலை உறுதி திட்டத்தில் முறைகேடுகள் தடுக்கப்படும்; பா.ஜ., தேசிய செயல் தலைவர் நிதின் நபின் உறுதி

2



கோவை: 125 நாள் வேலை உறுதி திட்டத்தில் முறைகேடுகள் செய்வது முற்றிலும் தடுக்கப்படும், என, பா.ஜ., தேசிய செயல் தலைவர் நிதின் நபின் பேசினார்.


பா.ஜ., தேசிய செயல் தலைவர் நிதின் நபின், கடந்த இரு நாட்களாக, கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம், முத்துக் கவுண்டன் புதூரில், வி பி ஜி ராம் ஜி எனும் வளர்ந்த பாரதம் - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உறுதி திட்ட ( கிராமப்புறம்) தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

அவர் பேசியதாவது: பழைய தேசிய ஊரக வேலை உறுதி திட்டமானது, மேம்படுத்தப்பட்டு, விக்சித் பாரத் ஜி ராம் ஜி திட்டமாக அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதில் முக்கிய அம்சம், 100 நாள் வேலை என்பது, 125 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் உள்ள மக்கள், தங்களுக்கு தேவையான திட்டத்தை அவர்களே திட்டமிடலாம்.


பழைய திட்டத்தில் பல குளறுபடிகள் இருந்தன. உங்களுக்கு சேர வேண்டிய பணத்தை மத்திய அரசு அனுப்பினாலும், இங்குள்ள அரசு, அதில் முறைகேடுகள் செய்து, உங்களுக்கு கிடைக்காமல் வஞ்சித்தது. புதிய திட்டத்தின் கீழ், அது தடுக்கப்பட்டு, நேரடியாக உங்களுக்கு பணம் கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.


லஞ்சம், ஊழல் இல்லாத நல்ல அரசாங்கத்தை தர வேண்டும், என்பதே நமது பிரதமர் மோடியின் கனவு. மத்திய அரசின் ஒரு ரூபாயாக இருந்தாலும் சரி, அது எந்தவித இடர்பாடுகளும், கமிஷனும் இல்லாமல் மக்களுக்கு கிடைக்க வேண்டும், என்பதில் மோடி உறுதியாக உள்ளார். மத்திய அரசு அனுப்பும் பணத்தை, முழுமையாக உங்களுக்கு கிடைக்கவிடாமல் செய்து, இங்குள்ள தி.மு.க., அரசு சுரண்டுகிறது. அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே புதிய திட்டத்தின் நோக்கம்.


வரும் காலத்தில் தமிழகம் முன்னேற வேண்டும். அதன் வாயிலாக புதிய பாரதம் உருவாக வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் திட்டம். சாதாரண ஏழை மக்கள் கஷ்டப்பட கூடாது. அவர்களை மேம்படுத்த வேண்டும். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் தவறாமல் கிடைக்க வேண்டும் என்பதே மோடியின் பிரதான திட்டம்.


தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி மலரும் என்பதில் சந்தேகம் இல்லை. மகளிருக்கான பாதுகாப்பு, வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ளவர் பிரதமர் மோடி. பெண் சக்திகளான உங்களை பார்க்கும் போது, மோடியின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பையும், நம்பிக்கையையும் காட்டுகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.


வேலை நாட்களை, 100 ல் இருந்து, 125 ஆக அதிகரித்தது, 336 ரூபாயாக சம்பளத்தை உயர்த்தியது, நேரடியாக வங்கி கணக்குக்கு பணம் அனுப்புவது உள்ளிட்டவைகளை அமல்படுத்தியதற்கு தொழிலாளர்கள் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.


முன்னதாக, பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், துணைத்தலைவர் கனகசபாபதி, முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் பேசினர். மேலிட பார்வையாளர் அரவிந்த் மேனன், எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement