ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

18

நமது டில்லி நிருபர்




ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்துள்ளது.




'நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம், நேற்று (ஜனவரி 09) தியேட்டர்களில் வெளியாகும்' என படக்குழு அறிவித்திருந்தது. மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (சென்சார் போர்), படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை. இந்த பிரச்னை காரணமாக 'ரிலீஸ்' நிறுத்தி வைக்கப்பட்டது.

பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்., புரொடக் ஷன்ஸ் சார்பில், தணிக்கை சான்று வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ஆஷா, ''தணிக்கை சான்று வழங்க வேண்டும். மறுஆய்வுக்கு அனுப்பிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது'' என உத்தரவிட்டார்.




இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்து வழக்கை, ஜன.21ம் தேதிக்கு ஒத்திவைத்தது.


'ஜனநாயகன்' படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் விரைவில் விசாரணைக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement