செஸ்: அர்ஜுன் 2வது இடம்

கோல்கட்டா: 'பிளிட்ஸ்' பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் 2வது இடத்தில் உள்ளார்.


கோல்கட்டாவில், டாடா ஸ்டீல் இந்தியா செஸ் ('ரேபிட் அண்ட் பிளிட்ஸ்') தொடர் நடக்கிறது. இதன் ஓபன் பிரிவில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், அர்ஜுன் எரிகைசி, நிஹால் சரின், பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் சோ வெஸ்லி உள்ளிட்ட 10 பேர் பங்கேற்கின்றனர். முதலில் நடந்த 'ரேபிட்' முறையிலான போட்டியில் இந்தியாவின் நிஹால் சரின் சாம்பியன் பட்டம் வென்றார்.
'பிளிட்ஸ்' முறையிலான போட்டிகள் (18 சுற்று) துவங்கின. முதல் நாளில் 9 சுற்றுகள் நடந்தன. முதல் சுற்றில் அர்ஜுன் எரிகைசி, விதித் குஜ்ராத்தி வெற்றி பெற்றனர். ஆனந்த், நிஹால் சரின், அரவிந்த், தங்களது போட்டியை 'டிரா' செய்தனர். பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார்.


ஒன்பது சுற்றுகளின் முடிவில் அமெரிக்காவின் சோ வெஸ்லி, 6 வெற்றி, 2 'டிரா', ஒரு தோல்வி என, 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் அர்ஜுன் (6 வெற்றி, ஒரு 'டிரா', 2 தோல்வி, 6.5 புள்ளி) உள்ளார். அடுத்த நான்கு இடங்களில் நிஹால் சரின் (5.5 புள்ளி), ஆனந்த் (5), விதித் (5), பிரக்ஞானந்தா (4) உள்ளனர்.

பெண்களுக்கான 'பிளிட்ஸ்' பிரிவில், 9 சுற்றுகளின் முடிவில் இந்தியாவின் வைஷாலி (5 வெற்றி, ஒரு 'டிரா', 3 தோல்வி) 5.5 புள்ளிகளுடன் 2வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். முதலிடத்தில் அமெரிக்காவின் காரிசா யிப் (6 புள்ளி) உள்ளார். வந்திகா (5), திவ்யா (4.5), ஹரிகா (4) முறையே 5, 6, 7வது இடத்தில் உள்ளனர்.

Advertisement