மேற்கு வங்கத்தில் புதிய கடற்படை தளம்: சீனா, வங்கதேசத்தை கண்காணிக்க திட்டம்

2

கொல்கட்டா: வங்கதேச துறைமுகங்களில் சீனா முதலீடு செய்து ராணுவ பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், உள்கட்டமைப்பை உருவாக்கி வரும் நிலையில், நம் கடற்படை மேற்கு வங்கத்தின் கொல்கட்டா அருகே புதிய கடற்படை தளம் அமைக்கும் பணியை துவங்கி உள்ளது.

நம் நாட்டை சுற்றி சீனா ராணுவ மற்றும் பொருளாதார செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சிக்கிறது.

இதற்காக பாகிஸ்தானின் குவாதர், இலங்கையின் ஹம்பன்தோட்டா, மியான்மரின் கியாக்பியூ, வங்கதேசத்தின் சிட்டகாங் என, பல நாடுகளில் துறைமுகங்கள் மற்றும் ராணுவ தளங்களை உருவாக்கி வருகிறது.

'ஸ்ட்ரிங் ஆப் பேர்ல்ஸ்'



நம் நாட்டை சுற்றி, இது ஒரு மாலை போல் அமைந்துள்ளதால், இதை, 'ஸ்ட்ரிங் ஆப் பேர்ல்ஸ்' எனப்படும், முத்துமாலை உத்தி என அழைக்கின்றனர்.

இதற்கு பதிலடியாக இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் கடல் பாதுகாப்பை அதிகரிக்க அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் இணைந்து, 'குவாட்' அமைப்பை நாம் துவக்கி உள்ளோம்.

சீனாவை எதிர்கொள்ளும் மற்றொரு முயற்சியாக, மேற்கு வங்க மாநிலம், கொல்கட்டாவில் உள்ள ஹால்டியா துறைமுகம் அருகே, வங்க கடலில் புதிய கடற்படை தளம் அமைக்கும் பணியை நம் கடற்படை துவங்கியுள்ளது.

இதுகுறித்து கடற்படை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நம் கடற்படைக்கு தற்போது மும்பை, விசாகப்பட்டினம், கொச்சி, அந்தமானின் போர்ட் பிளேர் ஆகிய இடங்களில், முக்கிய கடற்படை தளங்கள் உள்ளன.

புதிதாக கொல்கட்டா அருகே அமைய உள்ள ஹால்டியா கடற்படை தளம் மூலம், வங்கதேச கடற்கரை பகுதி மற்றும் அங்கிருந்து வரும் கப்பல் போக்குவரத்தை எளிதாக கண்காணிக்க முடியும்.

தற்கொலை ட்ரோன்



இத்தளத்தில் சிறிய தாக்குதல் கப்பல்கள் நிலைநிறுத்தப்படும். இதில் தானியங்கி துப்பாக்கி, தற்கொலை ட்ரோன் உள்ளிட்ட ஆயுதங்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

இவை கரையோர கண்காணிப்பு, கடற்கொள்ளை தடுப்பு மற்றும் விரைவான தாக்குதல்களுக்கு ஏற்றவை. மேலும், இந்த கடற்படை தளத்தில் 100 அதிகாரிகள் மற்றும் வீரர்கள் நிறுத்தப்பட உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement