பைக்கில் இருந்து விழுந்து பாதிரியார் மகன் பலி திருமண நாளில் சோகம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் திருமண நாளில், புல்லட்டில் சென்ற பாதிரியார் மகன் கீழே விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் டேவிட். இவர், அதே பகுதியில் உள்ள சர்ச்சில் பாதிரியாராக உள்ளார். இவரது மகன் ஜோப் ஜெசூரன், 32; இவருக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. ேஹமலதா என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.

ஜோப் ஜெசூரன் நேற்று முன்தினம் தனது திருமண நாளை கொண்டாடினார். இரவு 11:30 மணிக்கு சொந்த வேலை காரணமாக தனது ராயல் என்பீல்டு புல்லட்டில் விழுப்புரம், ராகவன்பேட்டை, ராஜா நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக புல்லட்டில் இருந்த நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில், பலத்த காயமடைந்த ஜோப் ஜெசூரனை, அங்கிருந்த சிலர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே ஜோப் ஜெசூரன் இறந்து விட்டதாக தெரிவித்தார். திருமண நாளில் ஜோப் ஜெசூரன் இறந்தது அவரது குடும்பத்தினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement