காலிறுதியில் லக்சயா சென்: இந்திய ஓபன் பாட்மின்டனில்

புதுடில்லி: இந்திய ஓபன் பாட்மின்டன் காலிறுதிக்கு இந்தியாவின் லக்சயா சென் முன்னேறினார்.

டில்லியில், 'சூப்பர் 750' அந்தஸ்து பெற்ற இந்திய ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோ மோதினர். அபாரமாக ஆடிய லக்சயா சென் 21-19, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு 2வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 14-21, 21-17, 17-21 என, பிரான்சின் கிறிஸ்டோ போபோவிடம் போராடி தோல்வியடைந்தார். இந்தியாவின் பிரனாய் 21-18, 19-21, 14-21 என சிங்கப்பூரின் லோ கீன் யூவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், சீனாவின் ஹான் யூ மோதினர். இதில் மாளவிகா 18-21, 15-21 என தோல்வியடைந்து வெளியேறினார்.


பெண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் திரீசா, காயத்ரி கோபிசந்த் ஜோடி 22-20, 22-24, 21-23 என, சீனாவின் லி யி ஜிங், லுவோ ஜு மின் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 27-25, 21-23, 19-21 என ஜப்பானின் ஹிரோகி மிடோரிகாவா, கியோஹெய் யமாஷிதா ஜோடியிடம் வீழ்ந்தது.

Advertisement