நீரிழிவு நோய் பாதிப்பில் இந்தியாவுக்கு 2ம் இடம்

1

புதுடில்லி: கடந்த 2024ல், 9 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து, அதற்கான உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது, சர்வதேச ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள லண்டனை தலைமையிடமாக வைத்து இயங்கும், 'தி லான்செட் டயபாடீஸ் அண்ட் எண்டோகிரைனாலஜி', மருத்துவ இதழ் ஆய்வறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில், 2024ல் உலகளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டவர்கள் தொடர்பான புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது.

அதன் விபரம்:





ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் உள்ள சர்வதேச நீரிழிவு நோய் கூட்டமைப்பு, சென்னையில் உள்ள இந்திய நீரிழிவு நோய் ஆராய்ச்சி நிறுவனம், டாக்டர் ஏ.ராமச்சந்திரன் நீரிழிவு நோய் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் மற்றும் நிபுணர்கள் இணைந்து உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். கடந்த 2005 - 24 வரையிலான காலங்களில் பதிவான விபரங்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன.

மொத்தம் 215 நாடுகளின் தரவுகளை ஆராய்ந்து, 246 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. பின், இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதன்படி, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சீனா முதலிடத்தில் உள்ளது. 2024ல், சீனாவில் 14.8 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டனர். 9 கோடி பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இந்தியா இரண்டாவது இடத்திலும், 3.9 கோடி பேருடன் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளது.

சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள், உலகளவில் நீரிழிவு நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. வரும் 2050ம் ஆண்டிற்குள், அமெரிக்காவை பாகிஸ்தான் மிஞ்சிவிடும் என கணிக்கப்பட்டு உள்ளது. 2024ல், 11 சதவீதத்துக்கும் அதிகமானோர், அதாவது 20 - 79 வரையிலான வயதுக்கு உட்பட்ட 58.9 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டனர். வரும் 2050ல், இது, 13 சதவீதமாக அதிகரிக்கும்.

கடந்த 2024ல், உலகளவில் ஒன்பது பேரில் ஒருவர் நீரிழிவு நோயுடன் வாழ்ந்து வந்துள்ளார். அந்த ஆண்டு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களின் எண்ணிக்கை 50 கோடியை தாண்டியது. 2050ம் ஆண்டிற்குள், இது, 90 கோடியாக உயரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement