பொருட்களை விற்பனை செய்ய 'ஸ்டார்ட் அப்'களுக்கு பயிற்சி

சென்னை: மத்திய, மாநில அரசுகளின் துறைகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்வது குறித்து 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

'ஜெம் போர்ட்டல்' எனப்படும் மத்திய அரசின் தேசிய அளவிலான பொது கொள்முதல் தளத்தில், 'டெண்டர்' கோரி பொருட்களை பொதுத்துறை நிறுவனங்கள் வாங்குகின்றன. இதில் பதிவு செய்வது, பொருட்களை விற்பனை செய்வது தொடர்பாக, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு தெரிவதில்லை.

இதனால் அவற்றின் தயாரிப்புகளுக்கு, பொதுத்துறை நிறுவனங்களிடம் தேவை இருந்தும் விற்க முடியாத நிலை தொடர்கிறது. எனவே, தமிழக 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு, ஜெம் போர்ட்டலில் பதிவு செய்வது, பொருட்களை விற்பது, பொருட்கள் மற்றும் சேவைகளை பட்டியலிடுவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம், 'ஆன்லைன்' வாயிலாக நாளை காலை, 11:30 மணி முதல் மதியம், 1:00 மணி வரை இதற்கான பயிற்சி வழங்குகிறது.


இதில் பங்கேற்க, 'form.startuptn.in/GEMS' என்ற தளத்தில் பதிவு செய்ய வேண்டும்



திருச்சியில் விற்பனை மையம் துவங்கியது ‛கேஸ் இந்தியா '


சென்னை: கட்டுமான உபகரணங்கள் தயாரிப்பாளரான 'கேஸ் இந்தியா', திருச்சியில் தன் முதல் நேரடி விற்பனை மையத்தை திறந்து உள்ளது.

திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில், 5,300 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ள புதிய விற்பனை மையத்தில், முழுமையான இரண்டு பணித்தளங்கள், பட்டறை மற்றும் 700 வகையான உதிரிபாகங்கள் கொண்ட சேமிப்பு கிடங்கு இடம்பெற்றுள்ளது.

சாலை, குடிநீர் திட்டம் மற்றும் பொது உட்கட்டமைப்பின் அடிப்படையில், திருச்சி முக்கிய சந்தையாக திகழ்வதாகவும்; புதிய மையம், வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமாக இருப்பதுடன், தென் மாநில சந்தையில் அவர்களின் தேவைகளுக்கு நேரடியாக சேவை வழங்க உதவும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

.

Advertisement