சாகித்ய விருதுக்கு போட்டியாக இனி செம்மொழி இலக்கிய விருது; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

53

சென்னை: கலை, இலக்கிய விருதுகளில் மத்திய அரசின் தலையீடு ஆபத்தானது. சாகித்ய அகாடமி விருது நிகழ்ச்சி ரத்தானதால் தமிழக அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருதுகள் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;

மனித இனம் தமது சிந்தனைகளை பிறருக்கும், அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்கும் கருவிதான் புத்தகங்கள். வாசிப்பு மூலமாக தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும் என்று ஏராளமான முன்னெடுப்புகளை திராவிட மாடல் அரசு எடுத்து வருகிறது.

எதையும் கேள்வி கேட்டு, விமர்சன பார்வையோடு அணுகி, பழமைகளை பொசுக்கின திராவிட இயக்கம் தமிழகத்தை பண்படுத்தியது. இலக்கியத்திற்கு எல்லைகள் கிடையாது. திருவள்ளுவரின் அறமும், இளங்கோவடிகளின் காப்பியமும், பாரதியின் கவிதைகளும் பாரதிதாசனின் கருத்துகளும், உலகம் எல்லாம் ஒலிக்க வேண்டும்.

அதே வேளையில் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் படைப்புகள், எளிய தமிழில் நம் கிராமத்து மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும். இதற்காகவே தமிழக அரசு கடந்த 3 ஆண்டுகளில் பலகோடி ரூபாய் நிதியை ஒதுக்கி, நூற்றுக்கணக்கான நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலமாக சிறந்த தமிழ் படைப்புகளை ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன் மற்றும் ஸ்பானிஷ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்க நிதி ஒதுக்கீடு செய்து இருக்கிறோம்.

தமிழகம் என்பது நீங்கள் தொழில்முதலீடு செய்ய மட்டும் உகந்த மாநிலம் அல்ல. அறிவை பகிர்ந்து கொள்ளவும் மிகச் சிறந்த மாநிலம். கீழடி முதல் பொருநை வரை கண்டெடுத்த தொல்லியல் சான்றுகளை பாருங்கள். தமிழ் சமூகத்தின் அறிவு, மரபு எப்படிப்பட்டது என்று அப்போது புரியும்.

மொழி என்பது பிரிக்கக்கூடிய சுவர் அல்ல. அது உலக மக்களை இணைக்கக்கூடிய பாலம். புத்தகங்கள் வெறும் பேப்பர் அல்ல... அவை ஒரு தலைமுறை, மற்றொரு தலைமுறைக்கு விட்டுச் செல்லக்கூடிய அறிவுச்சொத்து.

சில நாட்களுக்கு முன்பு என் மனதுக்கு நெருடலாக ஒரு செய்தி தலைநகர் டில்லியில் இருந்து வந்தது. 2025ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட இருந்த நிலையிலே, மத்திய அரசின் கலாசாரத்துறை தலையீட்டால் விருது அறிவிக்கக்கூடிய நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

இனி இது நடக்குமா என்று தெரியவில்லை. கலை, இலக்கிய விருதுகளில் கூட, அரசியல் குறுக்கீடுகள் பண்ணுவது ஆபத்தானது. இப்படி ஒரு சூழலில் தமிழக அரசு ஆக்கப்பூர்வமான உரிய எதிர்வினை ஆற்ற வேண்டும் என பல்வேறு எழுத்தாளர்களும், கலை, இலக்கிய அமைப்புகளை சேர்ந்தவர்களும் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது காலத்தின் தேவை என்று நாங்களும் உணர்ந்தே உள்ளோம். அதன்படி உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறேன். குறிப்பிட்ட இந்திய மொழிகளில் வெளியாகிற தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும்.

முதல்கட்டமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம், மராட்டியம் ஆகிய மொழிகளில் வெளியாகிற தலைசிறந்த படைப்புகளுக்கு செம்மொழி இலக்கிய விருது என்ற பெயரில் அந்த விருது வழங்கப்படும். விருதுடன் தலா ரூ. 5 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும். படைப்பிலக்கியத்தையும், வெளிப்படையான தேர்வு முறையும் உறுதி செய்யும் விதமாக புகழ்பெற்ற எழுத்தாளர்கள், விருதாளர்கள் அடங்கிய குழு, ஒவ்வொரு மொழிக்கும் தனியாக அமைக்கப்படும்.

அடுத்து அமைய போவதும் திராவிட மாடல் 2.0 ஆட்சி தான். அப்போது இதைவிட பெரிய அளவில் உலகத்தின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் இந்த பன்னாட்டு திருவிழாவை நிச்சயமாக நடத்துவோம். தமிழகம் முழுவதும் பல பிரமாண்ட நிகழ்வுகளை அறிவுக்கோயில்களாக எழுப்புவோம். அறிவுத்தீ வளர்ப்போம், வெல்வோம் ஒன்றாக.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement