சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு வாசித்த கவர்னர் உரை: முக்கிய அம்சங்கள் என்ன?

34


சென்னை: சட்டசபையில் உரையை வாசிக்காமல் கவர்னர் ரவி வெளியேறினார். இதனால் கவர்னர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

* தமிழகம் முழுவதும் 4.9 லட்சம் சுயஉதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் 1 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

* குடிசை இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட கனவு இல்லம் திட்டத்தில் 1 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் 1 லட்சம் வீடுகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

* தமிழகம் முழுவதும் ரூ.900 கோடி செலவில் அரசு கல்லூரிகளில் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 36 கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 4,432 பள்ளிகளின் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

* ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் பாதுகாப்பான குடிநீரை, தனிப்பட்ட குழாய் இணைப்புகள் மூலம் வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், மாநில அரசின் நிதியிலிருந்து மட்டும் 1 கோடியே 12 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்காக மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.3,112 கோடி நிதி இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் புதிய திட்டங்களுக்கும் மத்திய அரசு அனுமதி வழங்குவதில்லை.

* தமிழகத்தின் பொருளாதாரம் இதுவரை இல்லாத அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது; மகளிர் மேம்பாட்டுக்கான பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

* திராவிட மாடல் ஆட்சியில் ஆதி திராவிடர் மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன.

* பழங்குடியின மக்களுக்காக ரூ.315 கோடி செலவில் 7,255 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

* சிறப்பு தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ரூ.140 கோடி மானியம் வழங்கப்பட்டு உள்ளது.

* அம்பேத்கர் அயலகத் கல்வித் திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சம் கல்வி நிதி உதவி வழங்கப்பட்டு உள்ளது.

* காலனி என்ற சொல் நீக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

* சென்னை செம்மஞ்சேரியில் ரூ.216 கோடி மதிப்பீட்டில் உலகத் தரத்திலான விளையாட்டு நகரம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்கு ஒருங்கிணைந்த விளையாட்டு அறிவியல் மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

* கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியது வருத்தமளிக்கிறது. மெட்ரோ ரயில் விவகாரத்தில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது.

இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கவர்னர் உரையை வாசிக்கும் போது தெரிவித்தார்.

ஜன.24ம் தேதி வரை….!



சட்டசபையில் நிருபர்களிடம் சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 24ம் தேதி வரை நடைபெறும். நாளை (ஜனவரி 21) இரங்கல் குறிப்பும், ஜனவரி 22,23ம் தேதிகளில் கேள்வி பதிலுடன், கவர்னர் உரை மீதான விவாதமும் நடைபெற உள்ளது. அதேபோல் ஜனவரி 24ம் தேதி கேள்வி பதில் முடிந்தவுடன், முதல்வரின் பதிலுரை உள்ளது.



சட்டசபை மரபுகளே எப்போதும் தொடரும். தேசிய கீதம் இசைப்பது தொடர்பாக கவர்னர் எனக்கு கடந்த ஆண்டே கடிதம் எழுதினார். அதற்கு என்னுடைய பதிலும் வழங்கப்பட்டுள்ளது. அவை முன்னவர் துரைமுருகனாலும் விளக்கப்பட்டது. கவர்னரின் உரை மட்டுமே அவைக் குறிப்பில் ஏறும்: மற்ற எந்த நிகழ்வுகளும் அவை குறிப்பில் ஏறாது. சபாநாயகர் பேசும் போது அவையில் மற்றவர்களின் மைக் அணைக்கப்படுவது வழக்கம்தான்.


தயவு செய்து உங்கள் கடமையை செய்யுங்கள் என்று மட்டும் தான் கவர்னரிடம் கூறினேன். பார்லிமென்டில் ஜனாதிபதி உரையில் இப்படி செய்தால் ஏற்பார்களா? மரபுபடி அரசு தயாரித்து கவர்னரிடம் ஒப்புதல் பெற்ற உரையை வாசிப்பது கவர்னரின் கடமை. ஒரு அரசின் நிறை குறைகளை பற்றி கவர்னர் பேசலாமா? கவர்னர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் பேசலாம். இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கூறினார்.

Advertisement