கரூர் சம்பவத்தில் பலியானோர் குடும்பத்துக்கு அறிவித்த நிவாரணத்தை வழங்காத பா.ஜ.,

கரூர்: கரூரில், த.வெ.க., கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிவித்த 1 லட்சம் ரூபாய் நிவாரணம் இன்னும் வழங்கப்படவில்லை.


கரூர் வேலுச்சாமிபுரத்தில், த.வெ.க., தலைவர் விஜய் கடந்த செப்., 27ல் பங்கேற்ற பிரசார கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

கரூர் சம்பவத்தின்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, 'இறந்தவர்கள் குடும்பங்களுக்கு, கரூர் மாவட்ட பா.ஜ., சார்பில் தலா 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும். ஒரு வாரம் கழித்து, மாவட்ட தலைவர் செந்தில்நாதன் உட்பட நிர்வாகிகள் நிதியை வழங்குவர்' என அறிவித்தார்.

ஆனால், சம்பவம் நடந்து நான்கு மாதமாகியும், பா.ஜ., சார்பில் இன்னமும் நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை.

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் எதுவும் அறிவிக்காத நிலையில், முன்னாள் தலைவர் அண்ணாமலை எப்படி அறிவிக்கலாம் என அப்போதே சர்ச்சை எழுந்தது.

இதனால் தான், பா.ஜ., மாநில தலைமை, அந்த நிவாரண நிதி குறித்து கண்டுகொள்ளவில்லை. பாதிக்கப்பட்டவர்கள், இந்த அறிவிப்பை மறந்திருப்பர் என, கரூர் பா.ஜ.,வும் அமைதி காக்கிறது.


பா.ஜ., மாவட்ட நிர்வாகி கூறியதாவது: கரூர் மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில்நாதன், முன்னாள் தலைவர் அண்ணாமலையால் பதவி பெற்றவர். அவர் நிதியை கொடுத்து விடுவார் என்ற நம்பிக்கையில் அண்ணாமலை அறிவித்து விட்டார்.

ஆனால், நயினார் நாகேந்திரன் கவனத்துக்கு கொண்டு சென்றோம். அறிவித்தது அண்ணாமலை என்பதால் அவர் கண்டுகொள்ளவில்லை.

அறிவித்த தொகையை பல மாதங்கள் கடந்தும் உரியவர்களுக்கு கொடுக்காமல் இருப்பது, பா.ஜ.,வுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி உள்ளது.

நிவாரணத் தொகையை வழங்க சொல்லி, கட்சி கூட்டம் நடக்கும் போதெல்லாம் ஞாபகப்படுத்துகிறோம். மாவட்ட மற்றும் மாநில தலைமை இதில் ஆர்வம் காட்டுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


இது தொடர்பாக, கரூர் மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில்நாதனிடம் கேட்டபோது, “த.வெ.க., கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த குடும்பத்தினருக்கு, தலா 1 லட்சம் ரூபாய் வழங்கவில்லை; உண்மைதான்,” எனக்கூறி முடித்துக் கொண்டார்.

Advertisement