இந்தியாவுடன் சேர்ந்து எதிர்காலத்துடன் இணையுங்கள்: முதலீட்டாளர்களுக்கு மத்திய அமைச்சர் அழைப்பு

டாவோஸ்: இந்தியாவுடன் சேர்ந்து எதிர்காலத்துடன் இணையுங்கள் என்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்ற ஆண்டு கூட்டத்தில், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்தியாவின் பொருளாதார நிலை மற்றும் உலகளாவிய கூட்டாண்மை குறித்து விளக்கினார்.
அஷ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:
செமிகண்டக்டர்கள், செயற்கை நுண்ணறிவு , உற்பத்தி மற்றும் பசுமை எரிசக்தி உள்ளிட்ட அனைத்துப் பொருளாதாரத் துறைகளிலும் உலக நாடுகளுடன் இணைந்து செயல்பட இந்தியா தயாராக உள்ளது.

உலகளாவிய கடன் நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்தியா மிகவும் உறுதியான நிலையில் உள்ளது. பல வளர்ந்த நாடுகளின் கடன்-ஜிடிபி விகிதம் 120 சதவீதம் முதல் 280 சதவீதம் வரை இருக்கும் நிலையில், இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் 85 சதவீதம் என்ற குறைந்த அளவிலேயே உள்ளது.


வெளிநாட்டுக் கடன் சிக்கல்களிலிருந்து இந்தியாவைப் பாதுகாக்க, அரசாங்கம் வெளிநாட்டு நாணயக் கடன்களைக் குறைவாகவே வைத்துள்ளது. இந்தியா உலக நாடுகளுக்கு ஒரு நம்பகமான கூட்டாளியாக உருவெடுத்துள்ளது.
வலுவான பொருளாதார அடிப்படைகள் மற்றும் உள்கட்டமைப்பு முதலீடுகளால், அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்.
இவ்வாறு அஷ்வினி வைஷ்ணவ் பேசினார்.

Advertisement