தமிழகத்திற்கு ரூ.3,458 கோடி கல்வி நிதி எப்போது வரும்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி

95


சென்னை: தமிழகத்திற்கு ரூ.3,458 கோடி கல்வி நிதி எப்போது வரும்? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.


அவரது அறிக்கை: தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழகம் பக்கம் அடிக்கடி பிரதமர் மோடி வருகிறார். தமிழகத்திற்குத் தரவேண்டிய ரூ.3,458 கோடி கல்வி நிதி எப்போது வரும்? தொகுதி மறுசீரமைப்பு போது தமிழகத்தின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்? பாஜவின் முகவர்போல் செயல்படும் கவர்னரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்?

தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்? 100 நாள் வேலைத்திட்டம் தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் ஜி ராம் ஜி திட்டம் கைவிடப்படும் என வாக்குறுதி எப்போது வரும்? பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக மத்திய பாஜ அரசு இழைத்து வரும் மதுரை எய்ம்ஸ் எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்?



இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்? ஓசூர் விமான நிலையம், கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்? கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்? ஒட்டுமொத்தத் தமிழக மக்களின் ஒருமனதான கோரிக்கையான நீட் விலக்கு எப்போது அமலுக்கு வரும்? தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பாஜ கூட்டணிக்குத் தமிழகம் எப்போதுமே தோல்வியைத்தான் தரும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement