ரூ. 40 கோடியில் மீன் இறங்கு தளம் அமைக்கும் பணிகள்...  தீவிரம்; கிள்ளையை சுற்றியுள்ள 8 கிராம மீனவர்கள் மகிழ்ச்சி

கிள்ளை: கிள்ளையில், 40 கோடி ரூபாய் மதிப்பில், மீன் இறங்குதளம் மற்றும் முகத்துவாரம் நிலைப்படுத்தும் பணி துரிதமாக நடந்து வருவதால், கிள்ளையை சுற்றியுள்ள கிராம மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடற்கரையோர கிராமங்களான கிள்ளை, பட்டரையடி, பில்லுமேடு, சின்னவாய்க்கால், கலைஞர் நகர், எம்.ஜி.ஆர்., நகர், சிசில் நகர், தளபதி நகர் ஆகிய கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் சின்ன வாய்க்கால் முகத்துவாரம் வழியாக, படகில் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர்.

அங்கு, பிடிக்கப்படும் மீன் வகைகள் உள்ளூர் மீன் வியாபாரிகள் மூலம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

சின்ன வாய்க்கால் முகத்துவாரம் வெள்ளம், மழைக்காலங்களில் அடிக்கடி துார்ந்துபோய்விடுவதால், கிள்ளையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் வெள்ளாற்று முகத்துவாரம் மற்றும் பழையாறு வழியாக கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இதனால், மீனவர்களுக்கு கால விரையமும், பொருட்செலவும் ஏற்பட்டு வருகிறது.

இதனால், கிள்ளையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், சின்னவாய்க்கால் முகத்துவாரத்தை நிரந்தரமாக ஆழப்படுத்தித்தரக்கோரி, கடந்த 20 ஆண்டிற்கு மேலாக தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், மீனவர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு, நபார்டு ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 40 கோடி மதிப்பில், தமிழ்நாடு அரசு மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், மீன் இறங்குதளம் மற்றும் முகத்துவாரம் நிலைப்படுத்தும் பணி துவங்கி நடந்து வருகிறது.

மீன் ஏலக்கூடம், படகு அணையும் கூடம், மீன் வலை பின்னும் கூடம், சாலை வசதி, உயர்கோபுர மின் விளக்கு உள்ளிட்ட பணிகள் முடிவடைந்துள்ளன.

மிக முக்கியமான முகத்துவாரத்தை டிரஜ்ஜர் மூலம் ஆழப்படுத்தும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இப்பணி இன்னும் சில மாதங்களில் முடிந்துவிடும் என மீன் வளத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மீன் இறங்குதளம் மற்றும் முகத்துவாரம் நிலைப்படுத்தும் பணி நிறைவு பெற்று விரைவில் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்பதால், கிள்ளையை சுற்றியுள்ள 8 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement