நஷ்டத்தில் இருந்து மீள்வது எப்படி? 'பீச் ரிசார்ட்'டில் அதிகாரிகள் ஆலோசனை

14


சென்னை: முதல்வர் மருந்தகம், ரேஷன் கடைகள், கூட்டுறவு சங்கங்களை நடத்தவே நிதியில்லாமல் கூட்டுறவு துறை சிரமப்படுகிறது. அந்த நஷ்டத்தில் இருந்து மீள்வது எப்படி என்பது குறித்து, மாமல்லபுரம் தனியார், 'பீச் ரிசார்ட்டில்' உயரதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர். இதற்கு, 10 லட்சம் ரூபாய் அளவுக்கு செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.


கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன், மகளிர் சுய உதவி குழு கடன் உட்பட, பல வகை கடன்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கடைகள், முதல்வர் மருந்தகம் போன்றவற்றையும் இவை நடத்துகின்றன. பல சங்கங்கள் நிதி நெருக்கடியில் இருப்பதால், முதல்வர் மருந்தகம், ரேஷன் கடை வாடகை செலவை சமாளிக்க முடியாமல் சிரமத்திற்கு உ ள்ளாகியுள்ளன.

இந்நிலையில், கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் பயிர் கடன், நகை கடன், மகளிர் சுய உதவி குழு கடன் உள்ளிட்டவை தொடர்பாகவும், நஷ்டத்தில் இருந்து கூட்டுறவு சங்கங்களை எப்படி மீட்பது என்பது குறித்தும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் தலைமையில், அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.



இந்த ஆலோசனை கூட்டம், செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் தனியார் பீச் ரிசார்ட்டில் நேற்று முன்தினம் துவங்கியது; நேற்றும் நடந்தது. இதில், கூட்டுறவு கூடுதல் பதிவாளர்கள், மண்டல இணைப் பதிவாளர்கள், கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குநர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


கூட்டுறவு துறையின் ஆய்வு கூட்டம் நடத்த சென்னை கீழ்ப்பாக்கம், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில், ஏற்கனவே கூட்ட அறை உள்ள நிலையில், நவீன 'ஏசி' வசதியுடன் கூடிய புதிய அரங்கமும் கட்டப்பட்டுள்ளது. இது தவிர மாதவரம், அண்ணா நகரில் உள்ள கூட்டுறவு அலுவலகங்களிலும் ஆய்வு கூட்டங்கள் நடத்த இடவசதிகள் உள்ளன.


முதல்வர் மருந்தகம், ரேஷன் கடைகள், கூட்டுறவு சங்கங்களை நடத்தவே நிதியில்லாமல் கூட்டுறவு துறை சிரமப்படும் நிலையில், மாமல்லபுரத்தில் தனியார், 'பீச் ரிசார்ட்டில்' கூட்டுறவு துறை ஆய்வு கூட்டம் நடத்தியது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

@block_P@

கூட்டுறவு பணியாளர்கள் கூறுவது என்ன?

இதுகுறித்து, கூட்டுறவு பணியாளர்கள் கூறியதாவது: கூட்டுறவு பண்டக சாலைகள், ரேஷன் கடை ஊழியர்கள், ஊதிய உயர்வு கேட்டு வருகின்றனர். அதை வழங்காமல் பேச்சு நடத்த குழு அமைக்கப்பட்டு, தாமதம் செய்யப்படுகிறது. சங்கங்களை நடத்தவே சிரமப்படும் நிலை உள்ளது. முதல்வர் மருந்தகங்களின் செயல்பாடு குறித்து, கூட்டுறவு துறை உயரதிகாரிகள் மருந்தகங்களில் ஆய்வுக்கு செல்வதே இல்லை.


பொங்கல் பரிசு வழங்கியதற்கு ஒரு கார்டுக்கு, 5 ரூபாய் ஊக்கத்தொகை கேட்டும் வழங்கப்படவில்லை. இந்த சூழலில், 'பீச் ரிசார்ட்டில்' துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடத்த வேண்டுமா? இதனால், இரு தினங்களில், 10 லட்சம் ரூபாய் அளவுக்கு செலவாகி இருக்கும். இதை கூட்டுறவு அலுவலகத்திலேயே நடத்தி இருந்தால், செலவு ஏற்பட்டிருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர். block_P

Advertisement