பொன்முடி மீதான குவாரி வழக்கு; பிப்., 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு

விழுப்புரம்: விழுப்புரம் கோர்ட்டில் நடந்து வரும் முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை வரும் பிப்., 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில், கடந்த தி.மு.க., ஆட்சியின்போது விதிமுறை மீறி செம்மண் எடுத்து, அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி அவரது மகன் கவுதமசிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது, கடந்த 2012ம் ஆண்டில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர்.


இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில், அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை, கடந்த அக்டோபர் வரை நடந்தது. 57 சாட்சிகளிடம் விசாரித்ததில், 30 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர்.


இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் தொடர்புடைய ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், சதானந்தம், கோதகுமார், கோபிநாதன் ஆகிய 5 பேர் ஆஜராகினர்.


வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன், சாட்சிகள், வழக்கின் ஆவணங்களை சுட்டிக்காட்டி வாதிட்டார். அதற்கு, பொன்முடி உள்ளிட்ட எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் பதில் வாதம் செய்தனர். விசாரித்த மாவட்ட நீதிபதி மணிமொழி, விசாரணையை வரும் பிப்., 9ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Advertisement