ஆயிரம் கோடி ரூபாய் என்னாச்சு? ஹிந்து முன்னணி தலைவர் கேள்வி

6

திருப்பூர்: 'தி.மு.க. வின் தேர்தல் அறிக்கையில், கோவில்களின் மேம்பாட்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கப்படும் என்று கூறினீர்கள். ஆட்சியே முடியப்போகிறது. எவ்வளவு நிதி ஒதுக்கினீர்கள்?,' என ஹிந்து முன்னணி கேள்வி எழுப்பி உள்ளது.


ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:

தி.மு.க. ஆட்சிக்கு வந்த, 1,728 நாட்களில், 4 ஆயிரம் கும்பாபிஷேகங்கள் செய்துள்ளதாக சட்டசபையில் முதல்வர் பெருமையாக பேசினார். பக்தர்களின் பணத்தில் செய்த கும்பாபிஷேகங்களுக்கு வழக்கம் போல், தி.மு.க. அரசு ஸ்டிக்கர் ஒட்டி கொண்டு, ஹிந்துக்களை ஏமாற்ற நினைக்கிறது. யார் நடத்திய கும்பாபிஷேகத்துக்கு, யார் பெருமைப்படுவது என்ற கேள்வி எழுகிறது.

தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலுமே, அறநிலையத்துறை சார்பில், மட்டுமே கும்பாபிஷேகங்களும், அதற்கான திருப்பணிகளும் நடந்து வருகின்றனவா, அதற்கான நிதியை அரசு தருகிறதா? இல்லையே! அறநிலையத்துறையின் செலவுகள் அனைத்தும் பக்தர்களின் காணிக்கையால் மட்டுமே நடக்கிறதே தவிர, அரசு சார்பில் எந்த தொகையும் செலவிடுவதில்லை.

இதுதவிர, கொரோனா பெருந்தொற்று காரணமாக, 2020 முதல், 2022ம் ஆண்டு வரை வழக்கமாக நடைபெற வேண்டிய கோவில் திருப்பணிகள், கும்பாபிஷேகங்கள் எதுவும் நடத்த முடியாத சூழ்நிலை இருந்தது. பல கோவில்களில் கோர்ட் வழிகாட்டுதல், தொல்லியல் துறை வழிகாட்டுதல் என, திருப்பணி வேலைகள் துவங்கி காத்திருந்தன.


பின், தொடர்ச்சியான ஆண்டுகளில் அடுத்தடுத்து பல கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கும்பாபிஷேகம் செய்கிறோம் என்ற பெயரில், கோவில்களில் நடக்கும் ஊழல்களின் அவல நிலையும், இந்த திராவிட மாடல் அரசில் நடைபெற்று வருகிறது. அரசு துறை ஊழலில் முதலிடத்தில் இருப்பது அறநிலையத்துறை என்பது ஊரறிந்த உண்மை.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு என்று, பல லட்சம் ஏக்கர் நிலங்கள் இருந்தும், அவற்றை முறையாக பராமரிக்காமல் வருமானம் இல்லை என்பதை காட்டி, பல கோவில்களில் எந்த திருப்பணிகளும் நடக்கவில்லை.

தி.மு.க. வின் தேர்தல் அறிக்கையில், கோவில்களின் மேம்பாட்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கும் என்று கூறினீர்கள். ஆட்சியே முடியப்போகிறது. எவ்வளவு நிதி ஒதுக்கினீர்கள்? தாங்கள் செய்யும் மதவாத அரசியலுக்கும், ஹிந்து விரோத செயல்களுக்கும் வரும் நாட்களில் ஹிந்துக்கள் தக்க பாடத்தை புகட்டுவார்கள். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement