அஜித் பவார் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

புனே: விமான விபத்தில் உயிரிழந்த மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உடல், அவரது சொந்த ஊரில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, 'மஹாயுதி' கூட்டணி அரசில் துணை முதல்வராக இருந்தவர் அஜித் பவார். தேசியவாத காங்கிரஸ் தலைவரான இவர், மும்பையில் இருந்து பாராமதிக்கு, 'லியர்ஜெட்' என்ற சிறிய ரக விமானத்தில் நேற்று முன்தினம் காலை பயணம் செய்தார். இதில், அவரின் பாதுகாப்பு அதிகாரி விதிப் ஜாதவ் உட்பட நான்கு பேர் பயணித்தனர். கடும் பனிமூட்டம் காரணமாக, பாராமதியில் தரையிறங்குவதில் தாமதம் நிலவியது.

பல கட்ட முயற்சிக்கு பின் தரையிறங்கும் போது, ஓடுபாதையில் இருந்து சில அடி துாரத்தில், தரையில் மோதி விமானம் வெடித்து சிதறியது. இதில், விமானத்தில் இருந்த ஐந்து பேரும் உயிரிழந்தனர்.

அஜித் பவாரின் உடல், சொந்த ஊரான பாராமதியில் முழு அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது. இதற்காக, அங்குள்ள கேட்வாடியில் இருந்து இறுதி சடங்குகள் நடந்த வித்யா பிரதிஷ்டான் மைதானத்துக்கு, அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

அப்போது, வழிநெடுகிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், அஜித் பவார் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். வித்யா பிரதிஷ்டான் மைதானத்தில், தேசியக்கொடி போர்த்தப்பட்ட அவரின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடந்தன.

அஜித் பவாரின் மனைவியும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சுனேத்ரா பவார் முன்னிலையில், அவரது மகன்கள் பார்த் மற்றும் ஜெய் ஆகியோர் தந்தையின் உடலுக்கு தீ மூட்டினர்.

மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, ராம்தாஸ் அதாவலே, முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார், பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின், மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், ஆந்திர மாநில அமைச்சர் நாரா லோகேஷ், அஜித் பவாரின் உறவினரும் லோக்சபா எம்.பி.,யுமான சுப்ரியா சுலே உள்ளிட்டோர் இறுதி சடங்குகளில் பங்கேற்றனர்.

Advertisement