கணக்கெடுப்பு நடத்த மா.கம்யூ.,கோரிக்கை

வால்பாறை: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் விபரங்கள் குறித்து மீண்டும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும், என, மா.கம்யூ., கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

வால்பாறை மா.கம்யூ., கட்சியின் தாலுகா செயலாளர் பரமசிவம், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம், வால்பாறை மலைப்பகுதியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அதிக அளவில் உள்ளனர். கடந்த, 2004ம் ஆண்டு நகராட்சி வாயிலாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் விபரம் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன் வாயிலாக, அரசு உதவிகள் பெறுவதற்கும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு பல்வேறு அரசு துறைகளில் கல்வியின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

தற்போது பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருந்தும், அவர்கள் பெயர்கள் பட்டியலில் இல்லாததால், அரசின் பல்வேறு திட்டங்களை பெற முடியாமல் தவிக்கின்றனர்.

எனவே, வால்பாறை மக்களின் நலன் கருதி, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பெயர் பட்டியல் குறித்து, நகராட்சி சார்பில் மீண்டும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement