கூடுதல் உலர்களம் தேவை! நெல் காய வைக்க எதிர்பார்ப்பு

உடுமலை: உடுமலை அமராவதி அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு, அமராவதி ஆற்றில், தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில், குமரலிங்கம், கண்ணாடிபுத்துார், சோழமாதேவி, கணியூர், கடத்துார், காரத்தொழுவு பகுதிகளில், மட்டும், 4,686 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அணையிலிருந்து தண்ணீர் திறப்பை பொறுத்து, குறுகிய கால நெல் ரகங்களை, அப்பகுதியில், சாகுபடி செய்கின்றனர். அங்குள்ள விவசாயிகள், தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக நெல் சாகுபடி உள்ளது.

ஆனால், இப்பகுதியில், போதிய உலர் கள வசதியில்லாததால், அறுவடை சீசனில், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

நெல் மணிகளை இயந்திரங்கள் வாயிலாக பிரித்தெடுத்த பிறகு, குறிப்பிட்ட நாட்கள், வெயிலில் உலர வைத்தால் மட்டுமே, ஈரப்பதம் குறைந்து விற்பனைக்கு தயாராகும்.

ரோட்டிலும், விளைநிலங்களில் தார்ப்பாய் விரித்தும், நெல்லை காய வைக்கின்றனர். விவசாயிகள் கூறுகையில்,' நெல் அறுவடை சீசனில், போதிய உலர்களங்கள் இல்லாதது பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, நெல் அதிகளவு சாகுபடியாகும் பகுதிகளில், சாகுபடி பரப்பை கணக்கிட்டு, கூடுதலாக உலர் களங்கள் கட்ட, மாவட்ட வேளாண் விற்பனை குழு வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து தமிழக அரசுக்கும் கோரிக்கை மனு அனுப்பி வருகிறோம்,' என்றனர்.

Advertisement