தேர்நிலையம் மார்க்கெட் பணி நிறைவு வியாபாரிகளுக்கு கடைகள் ஒப்படைப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில் கட்டப்பட்ட தேர்நிலையம் மார்க்கெட் கட்டடத்தில், நேற்று வியாபாரிகளுக்கு கடைகள் ஒப்படைக்கப்பட்டது.

பொள்ளாச்சி தேர்நிலையம் மார்க்கெட் கடந்த, 1971ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த மார்க்கெட்டில், காய்கறிகள், வாழை இலை, தேங்காய் கடைகள் உள்ளிட்ட, 100 கடைகள் செயல்பட்டன.

மழை காலங்களில் வியாபாரிகள், காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் சிரமப்பட்டனர். கழிப்பிடங்களும் போதிய பராமரிப்பின்றி இருந்தது. போதிய குடிநீர் வசதியும் இல்லை. எவ்வித வசதியுமின்றி செயல்படும் தேர்நிலையம் மார்க்கெட் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வியாபாரிகளின் வலியுறுத்தினர்.

இந்நிலையில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தேர்நிலையம் மார்க்கெட், ஒரு கோடியே, 48 லட்சம் ரூபாய் செலவில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அங்கு செயல்பட்ட கடைகள் தெப்பக்குளம் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டன. அதன்பின், மார்க்கெட் கட்டடம் இடிக்கப்பட்டு, கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கடைகள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் சியாமளா தலைமை வகித்தார். கமிஷனர் குமரன் முன்னிலை வகித்தார்.

கோவை தெற்கு மாவட்ட செயலாளர் முருகேசன், வியாபாரிகளிடம் கடை சாவியை வழங்கினார். நகர பொறுப்பாளர்கள் நவநீதகிருஷ்ணன், அமுதபாரதி, பொள்ளாச்சி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் நித்தியானந்தன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'தேர்நிலையம் மார்க்கெட் புதுப்பிக்கப்பட்டன. மொத்தம், 56 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இவை கடைக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது,' என்றனர்.

Advertisement