அஜித் பவார் மனைவிக்கு துணை முதல்வர் பதவியா? தெரியாதே என்கிறார் சரத்பவார்

5


மும்பை: அஜித்பவார் மனைவி சுனேத்ரா பவாருக்கு மஹாராஷ்ரா துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதா என்ற கேள்விக்கு, ''எனக்கு ஏதுவும் தெரியாது. என்னிடம் ஏதும் ஆலோசிக்கப்பட வில்லை'' என சரத்பவார் பதில் அளித்துள்ளார்.



மஹாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார், 66, விமான விபத்தில் உயிரிழந்த நிலையில், பிளவுபட்ட தேசியவாத காங்., இணைய வேண்டும் என்பதே அவரது கடைசி விருப்பமாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு பிரிவுகளின் இணைப்பு விழா, பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் நடக்கவுள்ளதாகவும், துணை முதல்வராக அஜித் பவாரின் மனைவி சுநேத்ரா பதவியேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


இது தொடர்பாக நிருபர்கள் கேள்விக்கு சரத்பவார் அளித்த பதில்: அஜித்பவார் மனைவி சுனேத்ரா பவாருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படுவதாக கூறுவது பற்றி எனக்கு எந்த தகவலும் தெரியாது. அவருடைய கட்சி முடிவு செய்திருக்க வேண்டும்.


இன்று செய்தித்தாளில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். பிரபுல் படேல் மற்றும் சுனில் தடாகரே போன்ற சிலர் முடிவுகளை எடுக்க முன்முயற்சி எடுத்துள்ளனர். இது குறித்து என்னிடம் ஏதும் ஆலோசிக்கப்பட வில்லை. பிளவுபட்ட தேசியவாத காங்., இணைய வேண்டும் என்ற அஜித்பவார் விருப்பம் தற்போது நிறைவேற வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.


அஜித் பவார், சஷிகாந்த் ஷிண்டே மற்றும் ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் இரு பிரிவுகளின் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர். இணைப்பு விழா தேதி கூட நிர்ணயிக்கப்பட்டது. அது பிப்ரவரி 12ம் தேதியில் திட்டமிடப்பட்டு இருந்தது. துரதிர்ஷ்டவசமாக, அஜித் பவார் அதற்கு முன்பே எங்களை விட்டு சென்றுவிட்டார். இவ்வாறு சரத்பவார் கூறினார்.

Advertisement