தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்: விசாரணைக்கு ஆஜரானார் சந்திரசேகர ராவ்

ஹைதராபாத்: தெலுங்கானாவில் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதியின் தலை வருமான சந்திரசேகர ராவ், சிறப்பு விசாரணை குழு முன் நேற்று ஆஜரானார்.


தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, முந்தைய பாரத் ராஷ்ட்ர சமிதி ஆட்சியின் போது பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக புகார் எழுந்தன. இதுதொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.



இந்த விவகாரத்தில், போலீஸ் உயரதிகாரிகள் பலர் கைது செய்யப்பட் டுள்ள நிலையில், அப் போது மு தல்வராக இருந்த பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகர ராவுக்கு நேற்று முன்தினம் ஆஜராகும்படி, சம்மன் அனுப்பப்பட்டது.


அதற்கு சந்திரசேகர ராவ் தரப்பில், மாநகராட்சி தேர்தல் தொடர்பான பணிகள் இருப்பதால், விசாரணைக்கு ஆஜராக மாற்று தேதி ஒதுக்கும்படி கேட்டதுடன், தெலுங்கானாவின் யெராவல்லி பகுதியில் உள்ள தன் பண்ணை வீட்டில் விசாரணை நடத்தும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார்.


இதைத்தொடர்ந்து, விசாரணை தேதியை சிறப்பு விசாரணை குழு நேற்று மாற்றிய நிலையில், நந்தி நகரில் உள்ள அவரது வீட்டில் ஆஜராகும்படி உத்தரவிட்டது.


இந்நிலையில், சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள், நந்தி நகரில் உள்ள சந்திரசேகர ராவின் வீட்டிற்கு நேற்று சென்றனர். அப்போது, சந்திரசேகர ராவின் ஆதரவாளர்கள், அந்த வீட்டை முற்றுகையிட்டு ஆளும் காங்., அரசை கண்டித்து முழக்கமிட்டனர். இது, அரசியல் பழிவாங்கும் செயல் எனவும் அவர்கள் விமர்சித்தனர்.


இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசாரணை நடைபெற்ற சந்திரசேகர ராவின் வீட்டைச்சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த மாதம் 23ம் தேதி, சந்திரசேகர ராவின் மகனும், பாரத் ராஷ்ட்ர சமிதியின் செயல் தலைவருமான கே.டி.ராமாராவ், சிறப்பு விசாரணை குழு முன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

Advertisement