இந்தியாவை இழிவுபடுத்த வேண்டாம் ; ராகுலை எச்சரிக்கும் கிரண் ரிஜிஜூ

14

புதுடில்லி: 'நம் நாட்டை இழிவுபடுத்த வேண்டாம். ஒரு பெருமைமிக்க இந்தியராக இருங்கள்' என்று காங்கிரஸ் எம்பி ராகுலுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வலியுறுத்தியுள்ளார்.



2026-27ம் ஆண்டு நிதியாண்டுக்கான பட்ஜெட் நேற்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்பட்டது. இது நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை மையமாகக் கொண்ட பட்ஜெட் என்று கூறி பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பாராட்டி வருகின்றன. ஆனால், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.



அந்த வகையில், காங்கிரஸ் எம்பி ராகுலும் தனது பங்கிற்கு சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்தியாவின் உண்மையான நெருக்கடிகள் அனைத்தும் மத்திய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், உற்பத்தித்துறை சரிவடைந்துள்ளதாகவும் கூறியிருந்தார்.



அவரது இந்தக் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, உலகின் முன்னணி தொழிலதிபரின் கருத்தை மேற்கோள் காட்டி, பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில்; பொதுவாக நான் இந்தியர்கள் அல்லாதவர்களின் அறிக்கைகளுக்கு எதிர்வினையாற்றியது கிடையாது. தற்போது ராகுலுக்கு உணர்த்துவதற்காகவே உலகின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க்கின் கருத்தை மேற்கோள் காட்ட வேண்டியுள்ளது.

அரசை விமர்சிப்பது ஒரு ஜனநாயக உரிமை என்றாலும், நமது நாட்டை இழிவுபடுத்த வேண்டாம். இந்தியாவின் சாதனைகளை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். ஒரு பெருமைமிக்க இந்தியராக இருங்கள், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



முன்னதாக, உலகின் பொருளாதார பலம் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா - சீனாவை நோக்கி நகர்வதாக எலான் மஸ்க் கூறியிருந்தார். மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளை அடிப்படையாக வைத்து அவர் பகிர்ந்த பட்டியலில் 26.6 சதவீத ஜிடிபியுடன் சீனா முதலிடத்திலும், 17 சதவீத ஜிடிபியுடன் இந்தியா 2வது இடத்தில் இருந்தது. 9.9 சதவீத ஜிடிபியுடன் அமெரிக்கா 3ம் இடத்தை பிடித்திருந்தது.

Advertisement