அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல்; கொத்து கொத்தாக செத்துப்போன காகங்கள்; பீஹார் மக்கள் பீதி

பாட்னா: பீஹாரில் பறவைக் காய்ச்சல் காரணமாக ஒரே சமயத்தில் 150க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி 11ம் தேதி பீஹாரின் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள நவ்காச்சியாவில் 100க்கும் மேற்பட்ட காகங்கள் கொத்து கொத்தாக உயிரிழந்து கிடந்ததைக் கண்டு, காலை நடைபயிற்சி சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சில காகங்கள் உயிருக்கு போராடி கொண்டிருந்தன. இது குறித்து உடனடியாக வனத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, உயிரிழந்த காகங்களின் உடல்களை எடுத்துச் சென்று, பாட்னா மற்றும் போபால் ஆகிய இடங்களில் உள்ள ஆய்வகங்களுக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையில், உயிரிழந்த காகங்கள் பறவைக் காய்ச்சலால் (ஏவியன் இன்ப்ளூயன்ஸா வைரஸ்) பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பாதிப்பு கண்டறியப்பட்ட இடத்தைச் சுற்றியுள்ள 10 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தீவிர தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், அப்பகுதியிலுள்ள கோழிப்பண்ணைகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, வைரஸ் வீட்டுப் பறவைகளுக்குப் பரவியுள்ளதா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், ஏவியன் இன்ப்ளூயன்ஸா வைரஸால் பறவைகள் உயிரிழந்ததால், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்து கிடக்கும் பறவைகளைத் தொட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement