நாவலுார் ஏரியில் சுற்றுச்சூழல் பூங்கா முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு

சென்னை: சிறுசேரி சிப்காட் பூங்கா வளாகத்தில் உள்ள நாவலுார் ஏரியில், 30 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்காவை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரி சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில், நாவலுார் ஏரி உள்ளது. முறையான பராமரிப்பின்மை காரணமாக, இந்த ஏரி சீரழிந்து கிடந்தது.

இதை, 33.4 ஏக்கர் பரப்பளவில் துார்வாரி, கரைகளை பலப்படுத்தி, புனரமைத்து, அழகிய புல்வெளிகளுடன், 30 கோடி ரூபாய் செலவில் சுற்றுச்சூழல் பூங்கா உருவாக்கப்பட்டு உள்ளது.

இங்கு நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டும் பாதையும் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு, சுற்றுச்சூழல் அறிவு மையம், சிறுவர், சிறுமியருக்கான விளையாட்டு பகுதி, திறந்தவெளி உடற்பயிற்சிக்கான வசதிகள், பறவைகள் பார்வை மையம்.

திறந்தவெளி அரங்கம், நிர்வாக அலுவலகம், உணவகம், குடில்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

சிறுசேரி தொ ழிற்நுட்ப பூங்காவில் அமைந்துள்ள நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த சுற்றுச்சூழல் பூங்காவை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், குறு, சிறு தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன், தலைமை செயலர் முருகானந்தம், தொழில்துறை செயலர் அருண்ராய், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவன மேலாண் இயக்குநர் செந்தில்ராஜ், செங்கல்பட்டு கலெக்டர் சினேகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement