ஈரானில் தொடரும் அமைதியற்ற சூழல்; இண்டிகோ விமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

டெஹ்ரான்: ஈரானில் அமைதியற்ற சூழல் நீடிப்பதால் இண்டிகோ விமான நிறுவனம் தமது சேவையை பிப்.28 வரை ரத்து செய்துள்ளது.

ஈரானில் உள்நாட்டு போராட்டம் வெடித்துள்ளது. பொருளாதார நெருக்கடி, அரசியல் பதற்றம் எதிரொலியாக அங்கு தொடர்ந்து மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அங்கு அமைதியற்ற சூழல் நீடித்து வருகிறது. அரசியல் பதற்றம், உள்நாட்டு குழப்பங்கள் எதிரொலியாக ஈரான் நாடு தமது வான்வெளியை மூடியது.

இந் நிலையில், ஈரானில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு அங்கு பிப்.28ம் தேதி வரை இண்டிகோ விமான நிறுவனம் தமது சேவையை ரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி உள்ளதாவது;

ஈரானில் தற்போது நிலவி வரும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை அளிக்கும் வகையில் விமான பயண அட்டவணையில் சில மாற்றங்களை செய்திருக்கிறோம். அதன் ஒரு பகுதியாக, திபிலிசி, அல்மாட்டி, பாகு மற்றும் தாஷ்கண்ட் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் இண்டிகோ விமான சேவைகள் பிப்.28 வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளன.

பயணிகள் மற்றும் விமான பணியாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளவர்கள், பயண கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். https://bit.ly/4rnkK5G என்ற இணையதள முகவரியில் உள் நுழைந்து அதற்கான விவரங்களை அவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

பயணம் தொடர்பான ஏதேனும் மாற்றங்கள், புதிய அறிவிப்புகள் இருப்பின் அதுகுறித்த விவரங்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் இண்டிகோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Advertisement