பார்லி வளாகம் முன்பு கேரள காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம்

புதுடில்லி: பட்ஜெட்டில் கேரளாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை எனக் கூறி, அம்மாநில காங்கிரஸ் எம்பிக்கள் பார்லி வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2026-27ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நேற்று மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்தப் பட்ஜெட் நடுத்தர மக்களுக்கானது அல்ல என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், பட்ஜெட்டில் கேரளாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை எனக் கூறி, பார்லி வளாகத்தில் கேரள காங்கிரஸ் எம்பிக்கள் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல, கேரள சட்டசபையில், ஆளும் பினராயி விஜயன் அரசைக் கண்டித்து காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். கேரள சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் சட்டத்தின் விதிகளை மாநில அரசு மீறுவதாகக் கூறி, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நோட்டீஸை சபாநாயகர் நிராகரித்தார். இதைக் கண்டித்து சட்டசபையில் அமளியில் ஈடுபட்டு, பின்னர் வெளிநடப்பு செய்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் கூறுகையில், "கொலை வழக்குகளில் சிறையில் உள்ள சிபிஎம் தலைவர்களுக்கும், குற்றவாளிகளுக்கும் மாநில அரசு விதிகளுக்குப் புறம்பாக பரோல் வழங்குகிறது. அரசின் அரசியல் நலன்களைப் பாதுகாக்கவே சபாநாயகர் எங்கள் நோட்டீஸை நிராகரித்தார்," என்று குற்றம்சாட்டினார்.

பையனூர் ஸ்டீல் குண்டுவெடிப்பு வழக்கில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்ற சிபிஎம் குற்றவாளிகளுக்கு பரோல் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் குற்றம்சாட்டிவருகின்றனர்.

Advertisement