பெண்ணையாறு பிரச்னை: ஒரு மாதத்துக்குள் நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவு

1


- டில்லி சிறப்பு நிருபர் -

தமிழகம் - கர்நாடகா இடையே நீண்ட காலமாக நிலவும் பெண்ணையாறு நதி நீர் விவகாரத்தில் தீர்வு காண, ஒரு மாதத்துக்குள் நடுவர் மன்றத்தை அமைக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கர்நாடகாவின் நந்தி மலையில் உற்பத்தியாகும் நதி, தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலுார், விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக பாய்கிறது. தமிழகத்தில் இந்த நதி, பெண்ணையாறு என, அழைக்கப்படுகிறது. கர்நாடகாவில் பாயும் இந்த நதியின் குறுக்கே அணை கட்டும் முயற்சிகளில் அம்மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.


பெண்ணையாறு விவகாரத்தில் கர்நாடக அரசு விதிகளை மீறி செயல்படுவதாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு பல ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் , இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவு:
நதி நீர் என்பது ஒரு தேசிய சொத்து. எந்தவொரு மாநிலமும் அதன் மீது தனிப்பட்ட உரிமையைக் கோர முடியாது. இந்த விவகாரத்தில் தீர்வு காண, ஒரு மாத காலத்துக்குள் நடுவர் மன்றத்தை, மத்திய அரசு அமைக்க வேண்டும்.
இது தொடர்பாக, அதிகாரப்பூர்வமாக அரசிதழில் அறிவிப்பை வெளியிட வேண்டும். நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


இந்த விவகாரத்தை பொறுத்தவரை, நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்பது தமிழக அரசின் முதன்மையான கோரிக்கையாக இருந்த நிலையில், சட்ட ரீதியில் தமிழகத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக இந்த உத்தரவு பார்க்கப்படுகிறது.

Advertisement