யுஜிசி பரிந்துரைத்த நபர் இல்லாமல் தேடுதல் குழு: தமிழக அரசுக்கு கவர்னர் எதிர்ப்பு

4


சென்னை: '' பல்கலை துணைவேந்தர் நியமனத்துக்கான அமைக்கப்பட்ட தேர்வுக்குழுவில் யுஜிசி தலைவரின் பரிந்துரை செய்யப்பட்ட நபரை சேர்க்க வேண்டும் என கவர்னர் ரவி கூறியுள்ளார்.


இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: யுஜிசி விதிகளின்படி, துணைவேந்தர் பதவிக்கு நியமனம் செய்வதற்கான பெயர்ப் பட்டியலை பரிந்துரை செய்யும் தேர்வுக்குழுவில் யுஜிசி பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர் இடம்பெற வேண்டும் என்பது விதி. இந்த விதியை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தொடர்பான வழக்கிலும் கடந்த ஜூன் 30 அன்று உச்சநீதிமன்றம் இதனை உறுதி செய்துள்ளது. யுஜிசி விதிகளுக்கு முரணாக அமைக்கப்பட்ட ஒரு தேர்வுக்குழுவின் பரிந்துரையின் பேரில் செய்யப்படம் எந்தவொரு துணைவேந்தர் நியமனமும் செல்லாது என நீதிமன்றம் கூறியுள்ளது.


பல்கலைக்கழக சட்டத்தில் மாற்றம் செய்த தமிழக அரசு 'வேந்தர்' என்ற இடத்தில் தமிழக அரசு என மாற்றி உள்ளது. இதன் மூலம் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசிடம் சென்றுள்ளது.


மூன்று பல்கலைகழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பதற்கான கடந்த 2023 ம் ஆண்டு கவர்னர் வெளியிட்ட அறிவிக்கைக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், யுஜிசி பரிந்துரை செய்யும் ஒரு உறுப்பினரை சேர்ப்பதை கட்டாயமாக்கும் விதிமுறை மாநில பல்கலைகழகங்களை கட்டுப்படுத்தாது என அறிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. துணைவேந்தர் நியமனம் குறித்த தமிழக அரசின் சட்டத்திற்கும் சென்னை ஐகோர்ட் தடை விதித்து உள்ளது. இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவும் விசாரணையில் உள்ளது.


இருப்பினும், யுஜிசி தலைவர் பரிந்துரை செய்த நபர் இல்லாமல் தேர்வுக்குழு அமைப்பது கவலைக்குரிய விஷயம் ஆகும். வழக்கு நிலுவையில் உள்ள போதும், கடந்த டிச.,மாதம் 22ம் தேதி மாநில தேர்வுக்குழுவுக்கு தமிழக அரசு பதவி நீட்டிப்பு செய்துள்ளதுடன். துணைவேந்தர்கள் நியமனத்துக்கான நபர்களை பரிந்துரை செய்ய அவர்களுக்கு வரும் மார்ச் 21 வரை அவகாசம் செய்துள்ளது. பெரியார் பல்கலை மற்றும் பாரதிதாசன் பல்கலைக்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தேர்வுக்குழுவும், துணைவேந்தர் தேர்வுக்காக பட்டியலிடப்பட்டவர்களுடன் நேர்காணல் நடத்தி உள்ளனர்.


நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள போது, எடுக்கப்படும் நிர்வாக நடவடிக்கைகள், வழக்கு குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது என லோக்பவர் கருதுகிறது. வழக்கு நிலுவையில் உள்ள போது, தேர்வுக்குழுக்களின் பதவிக்காலத்தை நீட்டித்த உத்தரவிட்ட மாநில அரசின் நடவடிக்கையும், பட்டியலில் உள்ளவர்களுடன் தேர்வுக்குழுவினர் கலந்துரையாடியதும் நீதிமன்றங்களின் உத்தரவுகளை மீறிய செயல். நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது.


இதுபோன்ற சூழ்நிலைகளில், தேடுதல் குழுவினர், தற்போதைய நடைமுறையில் தேர்வு முறையை தொடர்வது என்பது சட்டப்படி நிலைத்து இருக்காது. நீதித்துறை உத்தரவுகளுக்கு முரணாக இருக்கும். அப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகளும் செல்லாதது ஆக்கப்பட வாய்ப்பு உள்ளது. இது மாநில அரசுக்கும், பல்கலைகழகங்களுக்கும் சட்ட மற்றும் நிர்வாக சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே, ஏற்கனவே பரிந்துரைத்தபடி யுஜிசி தலைவரின் பிரதிநிதியை தேர்வுக்குழுவில் சேர்ப்பதற்கு தேவையான உடனடி உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும். இந்த விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட் முடிவு எடுக்கும் வரை, தேர்வுக்குக்களின் செயல்பாடுகளையும், துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement