கோவில் நிலங்களை ஆக்கிரமிக்கும் சட்டவிரோத குவாரிகள்; தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

5


சென்னை: தமிழகம் முழுவதும் சட்டவிரோத குவாரிகள் செய்யும் ஆக்கிரமிப்புக்கு திமுக துணை போவதாக முன்னாள் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை; நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள ராணுவ வீரர்கள், தங்கள் சொந்தக் கிராமங்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து காப்பாற்றுவதற்காக விடுப்பு எடுத்து வர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருப்பது, ஊழல் மலிந்த திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டிற்கு ஒரு உதாரணமாகும்.

மதுரை மாவட்டம் கல்லிப்பட்டி தாலுகாவுக்குட்பட்ட, கல்லணை மற்றும் புதூர் கிராமங்களில் உள்ள அய்யனார் மற்றும் பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் பட்டியல் சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை, கல் குவாரித் தொழிலுக்காக திட்டமிட்டு அபகரிக்கப்படுவதாக ராணுவ வீரர்கள் தெரிவிக்கும் புகார்கள் இன்னும் அதிர்ச்சியளிக்கின்றன.

மாநிலம் முழுவதும் நடைபெறும் இதுபோன்ற ஆக்கிரமிப்புக்கு திமுக துணை போவது தொடர்ந்து இருந்து வருகிறது. தமிழகம் முழுவதும் சட்டவிரோத மணல் கொள்ளை அதிகளவில் நடப்பதாக அமலாக்கத்துறை ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளது. நாங்களும் சட்டவிரோத குவாரி செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இதற்கு பிறகும், திமுக அரசு வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, அதற்கு துணை போவது அம்பலப்படுவதோடு, சட்டம், நீதி மற்றும் சாமானிய மக்களின் உரிமைகள் மீது இருக்கும் அலட்சியத்தையும் காட்டுகிறது, இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement