என்னை பார்த்து டில்லி போலீஸ் அஞ்சுகிறது; மம்தா பானர்ஜி ஆவேசம்

5

புதுடில்லி: என்னை பார்த்து டில்லி போலீஸ் அஞ்சுகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.



எஸ்ஐஆர் நடைமுறை, அதில் குளறுபடிகள் உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை சந்திக்க தலைநகர் டில்லி வந்தார். அவர் தம்முடன் 15 பேர் கொண்ட கட்சி நிர்வாகிகள் குழுவினர், வரைவு வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்கள் என்று சிலரையும் அழைத்து வந்திருந்தார்.


அவர்கள் அனைவரும் டில்லியில் மேற்கு வங்க மாநில அரசின் இல்லமான வங்கா பவனில் தங்கி உள்ளனர். இதையறிந்து டில்லி போலீசார் அங்கு குவிந்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


நிருபர்களிடம் அவர் கூறியதாவது; டில்லி போலீசார் இங்கே என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். ஒரு பஸ் முழுவதும் போலீசார் குவிந்துள்ளனர். நாங்கள் அவர்களை விமர்சிக்க தயாரில்லை. தேர்தல் கமிஷனில் அதிகாரியை சந்திக்க முறைப்படி அனுமதி பெற்றே இங்கே வந்துள்ளோம். எஸ்ஐஆர் பணிகளால் மொத்தம் 150 பேர் இறந்துள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் என்று கூறப்பட்ட பல பேர் இங்கு வந்து இருக்கின்றனர்.


டில்லியில் குண்டுவடிப்பு நிகழ்ந்த போது, இந்த போலீசார் எங்கே சென்றனர்? நாங்கள் இங்கே வரும் போது டில்லி போலீஸ் எங்களை பார்த்து அஞ்சுகிறது. நாங்கள் நினைத்து இருந்தால் லட்சக்கணக்கானோரை இங்கே அழைத்துக் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் எஸ்ஐஆர் பதிவேடுகளில் இறந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளவர்களில் 50 பேரை மட்டுமே உடன் அழைத்து வந்திருக்கிறோம். டில்லி போலீசாரால் இங்குள்ள யாரையும் பாதுகாக்கவே முடியாது. காரணம் இந்த அமைப்பு இங்கே நிலபிரபுத்துவ முறை தான் செயல்படுகிறது.
இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

Advertisement