இது நியாயமா?

'கொஞ்சம் அவசரப்பட்டு விட்டாரோ...?' என, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு குறித்து கவலைப்படுகின்றனர், அவரது கட்சி நிர்வாகிகள்.

ஆந்திராவில், முந்தைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சியில், திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

சந்திரபாபு நாயுடு முதல்வரானதும், இந்த விவகாரத்தை கிளப்பி, பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தினார்; இது, நாடு முழுதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஜெகன்மோகன் ரெட்டி இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தாலும், இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்று, பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து, சி.பி.ஐ., விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சமீபத்தில் இந்த வழக்கு தொடர்பான குற்றப் பத்திரிகையை நீதிமன்றத்தில் சி.பி.ஐ., தாக்கல் செய்தது. அதில், 'லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை...' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது, ஆந்திர அரசியலில் மீண்டும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. 'அரசியல் சுய லாபத்துக்காக, சந்திரபாபு நாயுடு ஆன்மிகத்தை பயன்படுத்தலாமா... இது நியாயமா...?' என கொந்தளிக்கின்றனர், ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சியினர்.

Advertisement