திமுக- காங்., கூட்டணி உடைந்த கண்ணாடி போன்றது; அண்ணாமலை பேட்டி

10


கோவை: திமுக- காங்கிரஸ் கூட்டணி உடைந்த கண்ணாடி போன்றது. விஜயிடம் இன்ஜினே இல்லை; அவர் இன்ஜின் பற்றி பேசவே கூடாது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


கோவையில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:
நாட்டின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியே பட்ஜெட்டின் நோக்கம்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் தான் செல்கிறோம். திமுக- காங்கிரஸ் கூட்டணி உடைந்த கண்ணாடி போன்றது. விஜயை பொறுத்தவரை அவர் அரசியலுக்கு வந்து இருக்கிறார். அவரை வரவேற்கிறோம். அவர் எல்லாம் பேசட்டும். அவருக்கு இவிஎம் மெஷின் பதில் சொல்லும்.

டபுள் இன்ஜின்




எங்களிடம் டபுள் இன்ஜின் இருக்கிறது. விஜயிடம் நாம் இன்ஜினையே பார்க்கவில்லையே? இன்ஜின் இருக்கா? கார்ப்பரேட்டர் இருக்கா? இன்ஜினை ஸ்டார்ட் செய்வதற்கு ஆள் இருக்கிறதா? இன்ஜின் இல்லை. பெட்ரோல், டீசல் இல்லை. விஜய் இன்ஜின் பற்றி பேசக்கூடாது. ஒருவேளை 234 தொகுதிகளில் வேட்பாளர் நியமித்தால் இன்ஜின் இருக்கிறது. 234 தொகுதி வேட்பாளர்களையும் மக்கள் ஏற்றுக்கொண்டால் பெட்ரோல் இருக்கிறது. விஜயிடம் இன்ஜினே இல்லை; அவர் இன்ஜின் பற்றி பேசவே கூடாது.

முதல் கடமை….



விஜய் பேசும் போது மக்கள் கைத்தட்ட வேண்டும். அப்படி தான் அவர் பேச்சு உள்ளது. அவரது பேச்சில் ஆழமான கருத்து இல்லை. நமது கட்சி தலைவர் நயினாருக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறேன்.
என் தந்தையின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரை பார்த்து கொள்ள வேண்டியுள்ளது. அதனால் தான் கோவையில் அதிகமாக இருக்கிறேன். அப்பா டயாலிசிஸில் இருக்கிறார். அவரை பார்த்து கொள்வது எனது முதல் கடமை. இதனால் கட்சியின் அடிப்படை வேலைகளை செய்யும் சாத்தியக்கூறுகள் எனக்கு இல்லை.

6 தொகுதிகளுக்கும்...



என்னால் அதிகமாக பயணம் செய்ய முடியாது என்று வேண்டுகோள் விடுத்து இருக்கிறேன். கட்சியும் அதனை ஏற்றுக்கொண்டு வேறு வேறு பொறுப்பாளர்களை நியமனம் செய்வார்கள். பாஜ அடுத்து என்ன வேலை சொன்னாலும் செய்ய தயராக இருக்கிறேன். சிங்காநல்லூர் உட்பட தமிழகத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கு வேறு ஒரு பொறுப்பாளரை கட்சியில் இருந்து நியமனம் செய்வார்கள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

தலைகுனிவு



அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை எம்கேபி நகர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வரும் 11ம் வகுப்பு மாணவன், பள்ளிக்கு கஞ்சா பொட்டலம் கொண்டு வந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சியில், கல்வி நிலையங்கள் கூட போதைப் பொருள்களின் புகலிடமாக மாறியிருப்பது, தமிழகத்திற்கே தலைகுனிவு.

புத்தகம் வைத்திருக்க வேண்டிய கைகளில், கஞ்சா பொட்டலம் என்பது, வருங்கால சந்ததியினர் எதிர்காலம் குறித்த அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்துகிறது. கஞ்சா போதையில் நடைபெறும் குற்றங்கள், கடந்த நான்கு ஆண்டுகளில், மிக, மிக அதிகரித்துள்ளன.

நடவடிக்கை



சமீபத்தில், திருத்தணி ரயில் நிலையத்தில், கஞ்சா போதையில், ஒரு வடநாட்டு இளைஞரை, இளம் சிறுவர்கள் அரிவாளால் வெட்டிய காணொளியை பார்த்தோம். அதன் பிறகாவது, இந்தச் சொரணையற்ற திமுக அரசு, கஞ்சா வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், கஞ்சா வியாபாரிகளுக்கும், கள்ளச்சாராய வியாபாரிகளுக்கும், போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் திமுகவில் பதவி கொடுத்து அழகு பார்க்கும் முதல்வர் ஸ்டாலின், போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவார் என்று எதிர்பார்ப்பது தவறுதான்.

உலக அதிசயம்



அடிப்படை வசதிகள் கூட இல்லாத அரசுப் பள்ளிகளில், தற்போது போதைப்பொருள் புழக்கமும் சேர்ந்து கொண்டிருக்கிறது. பிறகு எப்படி, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்? 16 வயது சிறுவனுக்குக் கூட கஞ்சா கிடைக்கும் இடம் தெரிந்திருக்கிறது. சென்னை மாநகரக் காவல்துறைக்கு இன்னும் தெரியவில்லை என்பது எட்டாவது உலக அதிசயம். தமிழக பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள். திமுக ஆட்சியில், நமது குழந்தைகள் எதிர்காலம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்காலத்தையே நீங்கள் தான் காப்பாற்றியாக வேண்டும்.

நம்பி பலனில்லை



இன்று அரசுப் பள்ளி வரை வந்துவிட்ட கஞ்சா புழக்கம், நம் வீடு வரை வர வெகுநாட்கள் ஆகாது. இந்தக் கையாலாகாத திமுக அரசையோ, அதன் ஏவலாளியாகவே மாறிவிட்ட தமிழக போலீசாரையோ, இனியும் நம்பி பலனில்லை. குழந்தைகள் எங்கு செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள், யாருடன் பழகுகிறார்கள் என்பதை தயவுசெய்து உங்கள் நேரடி கண்காணிப்பில் வைத்திருங்கள். இந்த போதை மாடல் திமுக ஆட்சி, இனியும் தொடர்ந்தால், தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் எதிர்காலம், மிகப்பெரிய கேள்விக்குறி ஆகிவிடும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement