சமூக நீதியின் கட்டமைப்பை பலவீனப்படுத்திய மத்திய அரசு; ராஜ்யசபாவில் கார்கே குற்றச்சாட்டு

புதுடில்லி: 11 ஆண்டுகளில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு சமூக நீதியின் கட்டமைப்பை பலவீனப்படுத்தி விட்டதாக காங்கிரஸ் தலைவரும், ராஜ்ய சபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டி உள்ளார்.

ராஜ்ய சபாவில் அவர் பேசியதாவது;

நாட்டு மக்களின் நலன்களுக்காக அவர்கள் எவ்வளவு நேரம் ஒதுக்கி இருக்கிறார்கள், நாட்டுக்கு வெளியே எவ்வளவு நேரம் செலவிட்டு இருக்கிறார்கள் என்பதை உங்கள் முன் காட்ட விரும்புகிறேன். இது உங்கள் அனைவருக்குமே தெரியும்.

கடந்த 11 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு, சமூக நீதி கட்டமைப்பை பலவீனப்படுத்தி, அரசியலமைப்புக்கு தீங்கு விளைவித்து இருக்கிறது. மகளிரின் தலைமையை ஊக்குவிக்க பிரதமர் விரும்பி இருந்தால் அவர் எவ்வித நிபந்தனைகள் இன்றி மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை உடனடியாக அமல்படுத்தி இருப்பார்.

நீங்கள் உண்மையில் மகளிருக்கு அதிகாரம் தர விரும்பினால் இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும். 100 ஆண்டுகளுக்கு முன்பு, மகளிருக்கு ஓட்டு போட அதிகாரம் தந்தது காங்கிரஸ் கட்சி. அப்போது சரோஜினி நாயுடுவை கட்சி தலைவராக காங்கிரஸ் தேர்ந்து எடுத்தது. இன்று உங்களிடம் இதுபோன்ற உதாரணம் இல்லை.

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.

Advertisement