மடப்புரம் கோவில் காவலாளி மரண வழக்கு; சிபிஐ குற்றப்பத்திரிகையில் திடுக்

3

மதுரை: மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதா கொடுத்த நகை திருட்டுப் புகார் உண்மையில்லை என்று நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு பேராசிரியை நிகிதா காரில் வந்தார். அவரது காரில் இருந்த நகை திருடு போனது. இது தொடர்பான போலீஸ் விசாரணையில் கோவில் காவலாளியாக இருந்த அஜித்குமார் இறந்தார். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கிறது.


இவ்வழக்கில் கைதான போலீஸ்காரர்கள் ஆனந்த் உள்பட நான்கு பேர் ஐகோர்ட் மதுரைக் கிளையில் ஜாமின் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி ஸ்ரீமதி விசாரித்தார். இந்த வழக்கில் இன்று சிபிஐ அதிகாரிகள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.


அதில் கூறி இருப்பதாவது: நகை திருட்டு குறித்து நிகிதா அளித்த புகார் விசாரிக்கப்பட்டது. நகை திருட்டு எதுவும் நடக்கவில்லை என அது தொடர்பான வழக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இறந்த அஜித் குமாருக்கும் போலீஸ்காரர்களுக்கும் முன்விரோதம் எதுவும் இல்லை. போலீசார் வரம்பு மீறி உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி கூறியதாவது:
நிகிதா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, எதனால் நகை திருட்டு தொடர்பான புகார் முடித்து வைக்கப்பட்டது என கேள்வி எழுப்பினார்.


அஜித்குமார் மரண வழக்கு முடியும் வரை யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும். அப்பாவியை இப்படி தாக்கியுள்ளனர் எனக் கூறி விசாரணையை பிப்ரவரி 16ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Advertisement