3 ஆண்டுகளில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாரத் டாக்ஸி சேவை: அமித் ஷா

புதுடில்லி: இன்னும் 3 ஆண்டுகளில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாரத் டாக்ஸி சேவை விரிவடையும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறினார்.

புது டில்லி விஞ்ஞான் பவனில் உள்ள பிளீனரி ஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா 'பாரத் டாக்ஸி' சேவையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். இந்தத் தொடக்க விழாவைக் குறிக்கும் வகையில் டிரைவர்கள்,வாடிக்கையாளர்கள் பங்கேற்ற பிரம்மாண்டமான 'பாரத் டாக்ஸி பேரணி'யும் நடத்தப்பட்டது.இதில் சாதாரண கார்கள் மட்டுமின்றி, மின்சார வாகனங்கள் , ஆட்டோக்கள் மற்றும் டெலிவரி பைக்குகளும் பங்கேற்றன.பெண் டிரைவர்களின் (சாரதி திதி) பங்களிப்பு இந்தத் திட்டத்தின் உள்ளடக்கிய வளர்ச்சியை வெளிப்படுத்தியது.
இந்நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது:


பாரத் டாக்ஸி, "டிரைவர்களை லாபத்தின் உரிமையாளர்களாக மாற்றி அவர்களுக்கு அதிகாரமளிப்பதோடு, சமூகத்தில் அவர்களுக்கு மதிப்பையும் கண்ணியத்தையும் வழங்குகிறது,"

வழக்கமான டாக்ஸி நிறுவனங்களில் டிரைவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே இருந்து வருகிறார்கள் ஆனால் பாரத் டாக்ஸியில், டிரைவர்களே பங்குதாரர்களாக இருக்கிறார்கள்,லாபத்தின் ஒரு பகுதியை அவர்களே பெறுகிறார்கள்.அதிகப்படியான கமிஷன் சுமை இல்லாததால், டிரைவர்களே பொருளாதார சுதந்திரத்துடனும் கண்ணியத்துடனும் பணியாற்ற முடியும்.


கூட்டுறவு முறை என்றாலும், இது டிஜிட்டல் இந்தியா மற்றும் ஓஎன்டிசி தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதனால் ஓலா, ஊபர் செயலிகளுக்கு இணையாக வேகமாகவும் எளிதாகவும் இதைப் பயன்படுத்த முடியும்.

தற்போது டில்லி, ஆமதாபாத், ராஜ்கோட் நகரங்களில் செயல்பாட்டில் உள்ளது.அடுத்த 3 ஆண்டுகளுக்குள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், சிறிய நகரங்களிலும் இந்தச் சேவை விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.

Advertisement