டில்லியில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களை எழுதிய இருவர் கைது

1

புதுடில்லி: கனடா நாட்டில் பதுங்கி வாழும், குர்பத்வந்த் சிங் பன்னுான் என்பவர் துாண்டுதலின் படி, டில்லியில் சீக்கியர்கள் நிறைந்த பகுதியில் ஆட்சேபகரமான வாசகங்களை எழுதிய இருவரை, டில்லி போலீசார் கைது செய்துள்ளனர்.



எஸ்.எப்.ஜே., என்ற அமைப்பின் தலைவராக, கனடாவைச் சேர்ந்த குர்பத்வந்த் சிங் உள்ளார். அந்நாட்டில் பதுங்கி வாழும் இவர், இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிறார். சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் செயல்படுகிறார்.

அவரின் துாண்டுதலின் படி, காலிஸ்தான் ஆதரவு வாசகங்களை எழுதியதாக, பல்ஜிந்தர் என்ற ஆம்புலன்ஸ் டிரைவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். அவர் அளித்த தகவலின் படி, ரோஹித் என்ற கீர்த் என்பவரையும் கைது செய்துள்ளனர்.


அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையின் படி, பன்னு அளிப்பதாக கூறிய, தலா, 2 லட்ச ரூபாய்க்கு ஆசைப்பட்டு, இந்த செயலில் இறங்கியதாக அவர்கள் கூறினர்.

அவர்கள் மீது, சமூக நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Advertisement