புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: வியாபாரிகள் எதிர்ப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி சார்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே பயணிகள் நிழற்குடையில் இருந்த தரைக்கடைகளை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போலீசார், நகராட்சி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் புதிய பஸ் ஸ்டாண்டிற்குள் தரைக்கடைகள் அமைக்க அனுமதியில்லை. இதனால் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா ரோடு, ரயில்வே பீடர் ரோட்டோரத்தில் ஏராளமான தரைக்கடைகள் உள்ளன. இந்நிலையில் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே பயணிகள் நிழற்குடையை ஆக்கிரமித்து வைத்திருந்த தரைக்கடைகளை நகராட்சி அலுவலர்கள் போலீசார் உதவியுடன் அகற்றினர்.

அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வியாபாரி ஒருவர் மயங்கி விழுந்தார். அப்பெண்ணிற்கு தண்ணீர் கொடுத்த போலீசார் ஆட்டோவில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொருட்களை பறிமுதல் செய்து மீண்டும் கடை வைக்க கூடாது என நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.

வியாபாரிகள் கூறுகையில், விரிவாக்கம் செய்யாத போது தரைக்கடைகள் வைத்து பிழைப்பு நடத்தி வந்தோம். நகராட்சிக்கு கட்டணம் செலுத்தியுள்ளோம். எங்களை வாழ விடாமல் அதிகாரிகள் விரட்டி அடிக்கின்றனர். வட்டிக்கு வாங்கி வியாபாரம் செய்கிறோம். பிழைக்க வழியின்றி தெருவில் நிற்கிறோம். எங்களுக்கு பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்றனர்.

Advertisement