ஆமைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே சண்முகவேல் பட்டினம் மன்னார் வளைகுடா கடற்கரை கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கடல் ஆமைகள் பாதுகாத்தல் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

கடந்த டிச., மாதத்தில் இருந்து மன்னார் வளைகுடா கடற்கரை பகுதிகளில் கடல் ஆமைகள் முட்டையிடுவதற்காக அதிகளவில் வருகின்றன. அவற்றை பாதுகாக்கவும் முட்டைகள் இடுவது தெரிந்தால் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு தெரிவிக்கவும் வலியுறுத்தப்பட்டது. மீனவர்களின் வலையில் சிக்கும் கடல் ஆமைகளை உரிய முறையில் பாதுகாப்பாக கடலில் விடுவது குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது.

மீன்வள அமலாக்க எஸ்.ஐ., சித்தன், மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் டி.எஸ்.பி., மற்றும் மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் நாகராஜன், சிறப்பு எஸ்.ஐ., கண்ணன், ரஜினி தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். கிராம மக்கள் ஆர்வமுடன் கருத்தரங்கில் கலந்து கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்தனர்.

Advertisement