சிவகங்கை அரசு மருத்துவமனை ஆர்தோ பிரிவில் தள்ளு முள்ளு

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஆர்தோ பிரிவிற்கு சிகிச்சை பெற வந்தவர்கள் ஒரே டாக்டரை பார்க்க குவிந்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி புறநோயாளிகள் ஆர்தோ பிரிவு அறை எண் 9, 10ல் செயல்படுகிறது. தினசரி சராசரியாக 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

வியாழக்கிழமை மட்டும் குறிப்பிட்ட டாக்டரை பார்ப்பதற்காக 200க்கும் மேற்பட்டவர்கள் காலை 7:00 மணியில் இருந்தே நீண்ட நேரம் காத்திருந்து பார்த்து செல்கின்றனர். இது வாரம் தோறும் நடக்கும் தொடர் கதையாகயாக உள்ளது.

நேற்றும் அறை எண் 10ல் அந்த குறிப்பிட்ட டாக்டர் சிகிச்சை அளித்தார். அவரிடம் சிகிச்சை பெற மட்டுமே நோயாளிகள் சென்றனர். அதன் அருகில் உள்ள அறையில் ஆர்தோ டாக்டர்கள் இருந்தும் அங்கு சிகிச்சை பெற நோயாளிகள் மறுத்து விட்டனர்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் சமாளிக்க முடியாத பணியாளர்கள் அறை எண் 10ன் கதவை மூடிவைத்து ஒருவர் பின் ஒருவராக அனுப்பினர். இருந்த போதிலும் நோயாளிகள் அறை முன் நின்று கூச்சலிட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

செவிலியர்கள், பணியாளர்கள் அருகில் உள்ள அறையிலும் டாக்டர்கள் இருக்கிறார்கள் அங்கு செல்லுங்கள் என்று கூறியும் அங்கு செல்ல நோயாளிகள் மறுத்துவிட்டனர்.

இரு வேறு அறைகளில் டாக்டர்கள் அமர்ந்து சிகிச்சை அளிப்பதால் தான் குறிப்பிட்ட டாக்டரிடம் சிகிச்சை பெற நோயாளிகள் விரும்புகின்றனர்.

அதற்கு பதிலாக ஆர்தோ பிரிவு டாக்டர்களை ஒரே அறையில் அமர வைத்து நோயாளிகளை வரிசையாக உள்ளே சிகிச்சை பெற அனுப்பும் முறையை மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்தால் இது போன்ற தேவையில்லாத பிரச்னையை எளிதில் தீர்க்கலாம்.

Advertisement