இந்திய பெண்கள் அணி சாம்பியன்: தெற்காசிய கால்பந்து தொடரில் அசத்தல்

பொக்ஹாரா: தெற்காசிய கால்பந்து தொடரில் இளம் இந்திய பெண்கள் அணி சாம்பியன் ஆனது. பைனலில் 4-0 என வங்கதேசத்தை வீழ்த்தியது.


நேபாளத்தில் 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அணிகளுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. 2 முறை சாம்பியன் இந்தியா, வங்கதேசம், நேபாளம், பூடான் என நான்கு அணிகள் பங்கேற்றன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெற்ற இந்தியா, வங்கதேச அணிகள், பைனலுக்கு முன்னேறின.

பைனலில் இந்தியா, வங்கதேச அணிகள் மீண்டும் மோதின. ஏற்கனவே நடந்த லீக் போட்டியில் இந்திய அணி, நான்கு முறை சாம்பியன் ஆன வங்கதேசத்திடம் தோற்று இருந்தது.
இம்முறை சுதாரித்துக் கொண்ட இந்திய வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டனர். 42வது நிமிடம் ஜுலன் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் இந்தியாவின் எலிசபெத் 63வது நிமிடத்தில் கோல் அடித்தார். 68 வது நிமிடம் பியர்ல், 83ல் அன்விகா தலா ஒரு கோல் அடித்தனர். முடிவில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இத்தொடரில் மூன்றாவது முறையாக இந்தியா (2022, 2024, 2026) சாம்பியன் ஆனது.

Advertisement