அந்தியோதயா ரயில் இன்ஜின் கோளாறு சென்னை ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதம்

விருதுநகர்: விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகரில் நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் சென்ற அந்தியோதயா ரயில் இன்ஜின் பழுது காரணமாக நடு வழியில் நிறுத்தப்பட்டது. இதனால் சென்னை செல்லும் ரயில்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேல் தாமதமாக மதுரை சென்றன.

நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரம் புறப்பட்ட அந்தியோதயா ரயில் நேற்று மாலை 6:30 மணிக்கு விருதுநகர் ஆர்.ஆர்.நகர்., அருகே உள்ள துலுக்கப்பட்டியில் இருள் சூழ்ந்த காட்டுப்பகுதியில் நடுவழியில் இன்ஜின் பழுது காரணமாக நின்றது.

இதனால் அடுத்து வந்த மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில், சாத்துார் ரயில்வே ஸ்டேஷனிலே நிறுத்தப்பட்டது. சென்னை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் கோவில்பட்டியில் நிறுத்தப்பட்டது. கன்னியாகுமரி உள்ளிட்ட ரயில்கள் அடுத்தடுத்த ஸ்டேஷன்களில் நிறுத்தப்பட்டன.

அனைத்து ரயில்களும் 2 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். துாத்துக்குடி சென்ற சரக்கு ரயில் சாத்துார் அருகே நள் ளிரவில் நிறுத்தப்பட்டு அதன் இன்ஜின், அந்தியோதயா ரயிலில் இணைக்கப்பட்டு துலுக்கப்பட்டி ரயில்வே ஸ்டேஷன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்ட மாற்று இன்ஜின் பொருத்தப்பட்டு இரவு 10:00 மணிக்கு மேல் அந்த ரயில் புறப்பட்டது. இதையடுத்து அடுத்தடுத்த ரயில்வே ஸ்டேஷன்களில் காத்திருந்த ரயில்கள் புறப்பட்டன.

இதனால் தென்பகுதியில் இருந்த வந்த ரயில்கள் மதுரைக்கு ஒரு மணி நேரத்திற்கும் மேல் தாமதமாக வந்து சென்றன.

Advertisement