சேர்ந்து வாழ வர மறுத்த மனைவியை பயமுறுத்த நாட்டு வெடிகுண்டு வீசிய கணவன், நண்பர் கைது 'யு டியூப்' பார்த்து தயாரித்தது அம்பலம்

சென்னை: சேர்ந்து வாழ வர மறுத்த மனைவியை பயமுறுத்தும் நோக்கில், 'யு டியூப்' பார்த்து, நாட்டு வெடிகுண்டு தயாரித்து, மனைவி தங்கியிருந்த வீட்டின் அருகே வீசிய கணவன், அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் சக்திவேல், 31. இவர், மதுரவாயலை சேர்ந்த வர்ஷா, 26, என்பவரை காதலித்து, மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த பத்து மாதங்களாக, தாயின் வீட்டில் வர்ஷா வசித்து வந்துள்ளார். மூன்று நாட்களுக்கு முன், மனைவியை சந்திக்க வந்த சக்திவேல், மீண்டும் தன்னுடன் வாழ வர வேண்டும் என வற்புறுத்தியதால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Tamil News

ஆத்திரமடைந்த சக்திவேல், கத்தியால் கையில் காயம் ஏற்படுத்திவிட்டு தப்பியுள்ளார். இது குறித்து புகார் அளிக்கப்படவில்லை.

நேற்று முன்தினம் நள்ளிரவு 12:30 மணியளவில், சக்திவேல், தன் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் மீண்டும் மதுரவாயலுக்கு வந்துள்ளார்.

வர்ஷாவின் சித்தப்பா ரமேஷ் மற்றும் சித்தி சங்கீதா இருவரும் வீட்டின் வெளியே நின்றிருந்தபோது, திடீரென சக்திவேல், நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசியுள்ளார். அது, பலத்த சத்தத்துடன் வெடித்து, அப்பகுதியை உலுக்கியது. இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

அடுத்த சில வினாடிகளுக்குள், மீண்டும் மற்றொரு நாட்டு வெடிகுண்டை வீசி, கொலை மிரட்டல் விடுத்து, இருவரும் தப்பினர்.

இதனால், அப்பகுதி முழுதும் பதற்றம் நிலவியதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த மதுரவாயல் போலீசார், தடயவியல் நிபுணர்கள் மூலம் விசாரணையை துவங்கினர்.

தனிப்படை போலீசார், சில மணி நேரங்களிலேயே, தலைமறைவாக இருந்த சக்திவேல் மற்றும் அவரது நண்பர் சதீஷ், 23, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், மீண்டும் சேர்ந்து வாழ மறுத்த மனைவியை பயமுறுத்தும் நோக்கில் குண்டு வீசியதாக, சக்திவேல் வாக்குமூலம் அளித்தார்.

நாட்டுவெடி குண்டை, யு டியூப்பில் பார்த்து, கும்மிடிப்பூண்டி வீட்டிலேயே தயார் செய்து கொண்டு வந்ததும் தெரிந்தது.

இதேபோல், கடந்தாண்டு, மே 3ம் தேதி, மனைவியிடம் தகராறு செய்த சக்திவேல், கத்தியால் தாக்கிய வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

Advertisement