திருப்பூரில் விநாயகர் கோவிலை சேதப்படுத்திய மர்ம ஆசாமி

திருப்பூர்: திருப்பூர் டவுன் ஹாலில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் நள்ளிரவு கதவு, படிக்கட்டுகளை மர்ம நபர் சேதப்படுத்தியுள்ளார். இதையறிந்து மர்ம நபரை கண்டறிய கோரி, காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் ஹிந்து முன்னணியினர் அங்கு குவிந்தனர்.



திருப்பூர், குமரன் ரோடு, டவுன்ஹாலில் அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் உள்ளது. கோவிலில், நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்த பின் வழக்கம் போல் நடை அடைக்கப்பட்டது. நேற்று காலை கோவிலை திறக்க வந்த போது, நுழைவாயில் படிக்கட்டுகள், கதவு போன்றவை இடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளன.


திருட முயற்சி நடந்ததா என்பது தெரியவில்லை. கோவில் செயல் அலுவலர் பவானி அளித்த புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர். இது குறித்து அறிந்த மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், மாநில பொது செயலாளர்கள் கிஷோர்குமார், செந்தில்குமார் உள்ளிட்ட ஹிந்து முன்னணியினர் அங்கு திரண்டனர். காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது:

கோவில் படிக்கட்டு, கதவு நள்ளிரவில் இடித்து சேதப்படுத்தியுள்ளனர். மக்கள் சத்தம் போட்டதால், அங்கிருந்த நபர் தப்பித்து சென்றுள்ளார். இது 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியுள்ளது. போலீஸ் தரப்பில் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டுகின்றனர். வழக்கம் போல், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்வார்கள். இதற்கு முன், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நடந்த சம்பவத்தில், இதே போன்ற காரணத்தை கூறி விட்டுவிட்டனர்.


இந்த அரசு, ஹிந்துக்களுக்கும், கோவில்களுக்கும் விரோதமாக உள்ளது. தி.மு.க. ஆட்சிக்காலத்தில், 175க்கும் மேற்பட்ட கோவில்கள் இடிக்கப்பட்டன. திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுாரில், குமரன் குன்று என்ற நுாற்றாண்டு பழமையான கோவில் அகற்றப்பட்டது. இதை கண்டித்து வரும், 19ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தற்போது, டவுன்ஹால் கோவிலில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் முன்னெடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

@block_B@

மர்ம நபர் யார்?

விநாயகர் கோவிலில் இடித்து சேதப்படுத்தியது தொடர்பாக அப்பகுதி 'சிசிடிவி' கேமரா பதிவுகளை போலீசார் பார்வையிட்டு வருகின்றனர். அப்பகுதியில் சுற்றி திரிந்த ஒருவர், கோவிலில் அமர்ந்திருந்ததும், கோவிலுக்கு வரும் முன், ஸ்டேஷனுக்கு அந்த நபர் வந்து சென்றதும் தெரிந்தது. மனநலம் பாதிக்கப்பட்ட நபரா என்பது, அவர் பிடிபடும் போது தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.block_B

Advertisement