சந்தேகமா... டாக்டரைக் கேளுங்கள் பகுதிக்காக
எனது ஐந்து வயது குழந்தை அடிக்கடி காது வலிக்கிறது என சொல்கிறாள். எதனால் வலி ஏற்படுகிறது.
- -மணிமேகலை, மதுரை
சிறு குழந்தைகளுக்கு காதுவலி ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். அடிக்கடி ஏற்படும் மேல் சுவாசக்குழாய் நோய்த்தொற்று அல்லது ஒவ்வாமையால் காதுவலி ஏற்படக்கூடும். இதை மருந்துகளால் கட்டுப்படுத்தலாம். அடினாய்டு அல்லது டான்சில் எனப்படும் நிணநீர்ச் சுரப்பிகள் பெரிதாகி 'யூஸ்டேஷியன்' குழாயை அடைத்து, திரவம் தேங்கி அதனால் உண்டாகும் தொற்றினால் கூட காதுவலி ஏற்படலாம். சிலநேரங்களில் இதற்கு அறுவை சிகிச்சை தேவைப்படும்.
காதிற்குள் திரவம் சேர்ந்தால் கூட சில நேரங்களில் வலி ஏற்படும். இது தீவிரமாகும் பட்சத்தில் தலைப்பகுதி எக்ஸ்ரே பரிசோதனை, 'இம்பிடன்ஸ் ஆடியோமெட்ரி' பரிசோதனை மூலம் பிரச்னையை கண்டறியலாம். இதே போன்று கேட்கும் திறன் குறைபாடு இருந்தால், 'அடினாய்டகடமி' செய்து சிறிய குழாய் மூலம் காதில் இருக்கும் திரவத்தை வெளியேற்றி கேட்கும் திறனை மீட்டெடுக்க முடியும்.
- டாக்டர் மீனா பிரியதர்ஷினி காது, மூக்கு, தொண்டை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை நிபுணர் மதுரை
குழந்தைகளுக்கு நோய் தொற்றை கட்டுப்படுத்த வழி என்ன?
-- காயத்திரி, பழநி
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள குழந்தைகளுக்கு தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தாத போதிலும், குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ள குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். பள்ளிக்கு சென்ற சில நாட்களிலே காய்ச்சல், சளி போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். சாதாரணமாக ஓரிரு நாட்களில் இதுபோன்ற தொந்தரவுகள் சரியாகிவிடும். அந்த நேரத்தில் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலே பாதுகாக்க வேண்டும். அதற்கு மேல் தொந்தரவு ஏற்படும் போது மருத்துவரை அணுக வேண்டும். பறவை காய்ச்சல் போன்ற தொற்று நோய் ஏற்படும் நேரங்களில் பறவைகள் இறந்து கிடக்கும் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அவர்களுக்கு வாங்கி கொடுக்கும் அசைவ உணவுகளை துாய்மையானதா என்பதை உறுதி செய்ய வேண்டும். நகங்களை வளர்க்கவிடாமல் வெட்டி துாய்மையாக வைக்க வேண்டும். இரவு நன்கு துாங்க வைக்க வேண்டும். அலைபேசி பார்த்துக் கொண்டே குழந்தைகளுக்கு உணவு வழங்குவதை தவிர்க்க வேண்டும்.
- டாக்டர் ஜெயலட்சுமி பொது மருத்துவர் பழநி
எனக்கு வயது 55. சில தினங்களாக கண்ணில் சிவப்பு கலரில் பூச்சி பறப்பது போல் உணர்கிறேன். கண்ணை உறுத்துவது போல் உள்ளது. அழுத்தி தேய்க்கும் போது கண்கள் சிவந்து சிறிதளவு ரத்தக்கசிவு ஏற்படுகிறது. நான்கு ஆண்டுகளாக சர்க்கரை நோய்க்கு மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். இதற்கு ஆலோசனை கூறுங்கள்.
-- ஆர்.முருகேசன், பெரியகுளம்
சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கண் டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். மருந்துகளை வாங்கி தன்னிச்சையாக கண்ணில் செலுத்த வேண்டாம். கட்டுப்பாடற்ற சர்க்கரை அளவு உள்ளவர்களுக்கு கண்ணின் விழித்திரையில் (ரெட்டினா) கெட்ட ரத்தக்குழாய் உருவாகி, அதன் வழியாக ரத்தக்கசிவு ஏற்படும். ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். தவறினால் கண் பார்வை பாதிக்கும் அபாயம் ஏற்படும்.
-- டாக்டர் ஆர். சரயு வெங்கடலட்சுமி கண் அறுவை சிகிச்சை நிபுணர் மாவட்ட அரசு மருத்துவமனை பெரியகுளம்
n எனக்கு 25 வயதாகிறது. சைனஸ் பிரச்னையால் 6 மாதமாக அவதியாக உள்ளது. இயற்கை மருத்துவத்தில் இதற்கு தீர்வு காண முடியுமா.
- - கே.கவிதா, ராமநாதபுரம்.
முகத்தில் உள்ள காற்றறைகள் சைனஸ் எனப்படும். உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள போது நெற்றி, மூக்குப் பகுதியில் அலர்ஜி ஏற்பட்டு சைனஸ் அறைகளில் ஒவ்வாமை தொற்று ஏற்படும். சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் துாசி நிறைந்த பகுதியில் நீண்ட நேரம் இருப்பது, குளிர்ந்த காற்றை சுவாசிப்பது போன்றவற்றால் தலைவலி, மூக்கில் நீர் வழிவது, தும்மல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.
இதனை ஆரம்பத்தில் கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்த முடியும். முகத்தில் 4 விதமான சைனஸ் பிரச்னை தொந்தரவு ஏற்படும். இயற்கை மருத்துவத்தில் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு நசியம் வர்ம சிகிச்சை முறையில் மூக்கு வழியாக மருந்து செலுத்தப்படும். பின் முகத்தில் சிறிது மஜாஜ் செய்வதன் மூலம் சைனஸ் பிரச்னையை சரி செய்ய முடியும்.
அதுவே சைனஸ் பிரச்னை தீவிரமானால் இயற்கை மருத்துவ முறையில் சரிசெய்வது கடினம். அறுவை சிகிச்சை மூலம் தான் சரிசெய்ய முடியும்.
- டாக்டர் சுஜாதா சித்த மருத்துவர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்
n மஞ்சளாகும் பற்கள் - தீர்வு என்ன
- -குமார், சிவகங்கை
பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவதற்கு எனாமல் சரியாக உருவாகாமல் மெலிதாக இருப்பதே காரணம். இது பாக்டீரியாவால் ஏற்படும் பற்சிப்பி நோயின் அறிகுறி. இது ஈறு திசுக்களை சிவப்பாக மாற்றி, வாய் வீக்கத்திற்கு வழிவகுக்கும். ஆரம்பத்தில் இதை சரிசெய்யாவிட்டால் தசைநார்கள் சேதமடைந்து பல் இழப்பு ஏற்படும்.
இப்பிரச்னை உடையவர்கள் உடனடியாக பல் மருத்துவரை அணுக வேண்டும். கால்சியம், வைட்டமின் டி.ஏ.சி., பற்றாக்குறையாலும் இந்த பிரச்னை ஏற்படும். வைட்டமின் நிறைந்த உணவுகளை உட்கொண்டு, தினமும் இருமுறை பல் துலக்கி, சுகாதாரத்தை பின்பற்றினால் இதை சரிசெய்துவிடலாம்.
- - டாக்டர் விஜய்பாரத் அரசு மருத்துவமனை காளையார்கோவில்
n எனது அம்மாவுக்கு 46 வயது ஆகிறது. அடிக்கடி கை, விரல்கள், கால் மூட்டுகள் வீங்கி அவதிப்படுகிறார். மூட்டுகள் வீக்கத்துடன் சூடாக இருக்கிறது. ஊசி போட்டு மாத்திரை சாப்பிட்டால் சரியாகிறது. டாக்டர்கள் கீழ்வாதம் என்கின்றனர். இது எதனால் ஏற்படுகிறது. சிகிச்சை முறை என்ன
-- கே.கார்த்திகேயன், சாத்துார்
பெரும்பான்மையாக 40 முதல் 50 வயதை தொடும் ஆண், பெண்களுக்கு கீழ்வாதம் ஏற்படுகிறது. உயர் ரத்த அழுத்தம் காரணமாகவும் ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிப்பாலும் மூட்டுகளில் ஒருவகையான உப்பு படிமானம் ஏற்பட்டு திடீரென மூட்டுகள் வீங்கி வலி ஏற்படும்.
மனக்கவலை, மன அழுத்தம் காரணமாகவும் உடல் எடை அதிகரிப்பாலும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். ரத்த அழுத்த மாத்திரை எடுத்துக் கொள்வதோடு அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். குளிர்காலத்தில் மிதமான சூட்டுடன் அதிக அளவு தண்ணீர் குடித்தால் ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலம் சிறுநீர் வழியாக வெளியேறும்.இறைச்சி, மீன், கடல்பாசி உண்பதை தவிர்க்க வேண்டும். தண்ணீர் அதிகம் குடிப்பதன் மூலம் இந்த பாதிப்பு ஏற்படுவதை தடுக்கலாம்
- டாக்டர் கொண்டல் சாமி சாத்துார்
மேலும்
-
பாகிஸ்தானுக்கு தொடரும் பதிலடி; செனாப் நதி நீர் மின் திட்டத்துக்கு டெண்டர் கோரியது இந்தியா!
-
ஐந்து ஆண்டுகளில் முதல்வர் ஸ்டாலின் செயல்பாடு முட்டை தான்: நயினார் நாகேந்திரன்
-
கூட்டணி பேச குழு அமைத்தும் தி.மு.க., தாமதப்படுத்துகிறது: காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் தாக்கு
-
சாவர்க்கருக்கு பாரத ரத்னா கேட்கும் மோகன் பாகவத்; சாவர்க்கரின் பேரன் வரவேற்பு
-
எந்த முறைகேட்டை மறைக்க தேர்வு ரத்து: விஜய் கேள்வி
-
அலங்கோல திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்கி விட்டது; சொல்கிறார் எல்.முருகன்