திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்போம்: திருமா திட்டவட்டம்

18

சென்னை: இந்த முறை நாங்கள் கூடுதலான இடங்களில் போட்டியிட விரும்புகிறோம். திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்போம் என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. தி.மு.க., கூட்டணிக்குள் கடந்த சில நாட்களாக பனிப்போர் நீடித்து வருகிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் தொகுதி என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது; இது, தி.மு.க.வுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

பா.ம.க.,வை கூட்டணியில் சேர்த்தால், நான் வெளியேறுவேன் என்று திருமாவளவன் எச்சரித்துள்ளார். இன்று அதிக தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறோம் என திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அவர் புதுச்சேரியில் நிருபர்களை சந்தித்தார்.

கேள்வி: சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது நீங்கள் திமுகவிடம் எப்பொழுது தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறீர்கள் ?




திருமாவளவன் பதில்: திமுக தரப்பில் பேச்சுவார்த்தைக்கான ஒரு குழுவை நியமிப்பார்கள். அந்தக் குழு அதிகாரப்பூர்வமாக ஒவ்வொரு தோழமைக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கும். அப்பொழுது நாங்கள் அவர்களோடு பேசி எங்களுக்கான தொகுதிகளை நாங்கள் முடிவு செய்வோம்



கேள்வி: கடந்த தேர்தல் போல இருக்குமா? இந்த முறை போட்டியிடும் தொகுதிகளில் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறதா?



திருமா பதில்: ஒவ்வொரு தேர்தலிலும் நாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று விரும்பி பேச்சுவார்த்தையில் அழுத்தம் கொடுத்து வந்து இருக்கிறோம்.


அதேபோல் இந்த முறையும் நாங்கள் கூடுதலான இடங்களில் போட்டியிட விரும்புகிறோம். அந்த விருப்பத்தை வெளிப்படுத்துவோம். அதிக தொகுதிகள் கேட்போம். பேச்சுவார்த்தையில் முடிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்

Advertisement