வளர்ச்சியில் வேகம் காட்டும் மஹிந்திரா

இ ந்தியாவின் டாப் - 5 கார்ப்பரேட் நிறுவனங்களின் பட்டியலில் மஹிந்திரா அண்டு மஹிந்திரா தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளது. வெறும் ஸ்டீல் டிரேடிங் நிறுவனமாக துவங்கி, இப்போது எஸ்.யு.வி., வாகனங்கள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த விவசாய உபகரணங்கள் தயாரிப்பில் உலகமே வியக்கும் ஒரு இந்திய பிராண்டாக இது உருவெடுத்துள்ளது.

எஸ்.யு.வி., வாகனங்கள் நம் நாட்டின் சாலைகளில் ஓடும் நான்கு எஸ்.யு.வி., வாகனங்களில் ஒன்று மஹிந்திரா தயாரிப்பாக இருக்க வாய்ப்புள்ளது. 'ஸ்கார்பியோ, பொலிரோ, தார், எஸ்.யூ.வி.,700' போன்றவை மிகப்பெரிய வரவேற்பை பெற்ற வாகனங்களாக உள்ளன.

சிறுநகரங்களில் தொழில் அதிபர்களின் விருப்பமாக, 'பொலிரோவும்' உலகத்தரம் வாய்ந்ததாக 'ஸ்கார்ப்பியோவும்' உள்ளன. ஆனால், இவை, கிராமப்புற அல்லது பயன்பாட்டு வாகனங்களுக்கான பிராண்டாக மட்டுமே அறியப்பட்டு வந்தன.

Tamil News
இந்நிலையில், 'செடான் மற்றும் ஹேட்ச்பேக்' கார்களை கைவிட்டு, தனது பலமான எஸ்.யு.வி.,களில் மட்டும் கவனம் செலுத்தியது, மஹிந்திராவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.

அதன் தொடர்ச்சியாக 2020ல் இரண்டாம் தலைமுறை 'தார், 2021ல் எஸ்.யூ.வி., 700 மற்றும் 2024ல் தார் ராக்ஸ்' ஆகிய கார்களை அறிமுகப்படுத்தியது.

இதையடுத்து, 2025ம் ஆண்டில் டாடா மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி, இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக மஹிந்திரா உருவெடுத்தது.

மஹிந்திரா பார்ம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனை எண்ணிக்கையில் உலகின் மிகப்பெரிய டிராக்டர் தயாரிப்பு நிறுவனமாக மஹிந்திரா திகழ்கிறது.

'ரைஸ்' என்ற கொள்கையின் அடிப்படையில் இயங்கும் இந்நிறுவனம், கிராமப்புற வளர்ச்சியில் முழு கவனம் செலுத்தி வருகிறது.

மேம்படுத்தப்பட்ட விதைகள் (மஹிந்திரா அக்ரி) மற்றும் நவீன விவசாய முறைகள் வாயிலாக விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தி, அவர்கள் டிராக்டர் வாங்குவதற்கான தேவையை அதிகப்படுத்த முயற்சிக்கிறது.

2026 ஜனவரியில், உள்நாட்டு டிராக்டர் விற்பனை கடந்த ஆண்டை விட 46 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 'மஹிந்திரா டிராக்டர்ஸ்' 40க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், 'ஸ்வராஜ் டிராக் டர்ஸ் பிராண்டு' இந்திய விவசாயிகள் மத்தியில் அதிக நம்பிக்கையை பெற்றுள்ளது.

சேவை நிறுவனங்கள் இந்தியாவின் முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ஒன்றாக மஹிந்திரா பைனான்ஸ் உள்ள நிலையில், இதில் எம் அண்டு எம்., நிறுவனம் 52.90 சதவீத பங்குகளை வைத்துள்ளது. டிராக்டர்கள், எஸ்.யூ.வி.,கள் மற்றும் சிறு,குறு தொழில்களுக்கு தேவையான கடன் உதவிகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

உலகளாவிய தகவல் தொழில்நுட்ப ஜாம்பவானாக திகழும் டெக் மஹிந்திரா , ஏ.ஐ., 5ஜி தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் நிபுணத்துவம் பெற்றதாக இருக்கிறது.

வளர்ச்சி ரத்தினங்கள் அதிக வளர்ச்சியும் லாபமும் ஈட்டக்கூடிய தனது துணை நிறுவனங்களை மஹிந்திரா, வளர்ச்சி ரத்தினங்கள் என அழைக்கிறது. இவை ஒவ்வொன்றும் தலா 200 கோடி டாலர் (கிட்டத்தட்ட 18,000 கோடி ரூபாய்) டாலர் மதிப்பீட்டை எட்டுவதை இலக்காக கொண்டு உள்ளன.

மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டி: மின்சார மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் சிறிய வணிக வாகனங்களில் கவனம் செலுத்துகிறது.

மஹிந்திரா ட்ரக் அண்டு பஸ் பிரிவு, 'பிளாசோ மற்றும் பூரியோ' பிராண்டுகள் வாயிலாக கனரக வாகனங்கள் மற்றும் பேருந்து சந்தையில் இயங்குகிறது.

கடந்த ஆகஸ்ட் 2025ல், 'எஸ்.எம்.எல்., இசுசூ' நிறுவனத்தின் 58.96 சதவீத பங்குகளை கைப்பற்றி, அதனை 'எஸ்.எம்.எல்., மஹிந்திரா லிமிடெட்' என பெயர் மாற்றம் செய்துள்ளது.

கிளப் மஹிந்திரா: ' வெக்கேஷன் ஓனர்ஷிப்' முறையில், 100க்கும் மேற்பட்ட ரிசார்ட்டுகளை நிர்வகிக்கும் இந்நிறுவனம், தற்போது 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஹோட்டல் துறையில் புதிய தடம் பதிக்கிறது.

2030ம் நிதியாண்டுக்குள் 'மஹிந்திரா சிக்னேச்சர் ரிசார்ட்ஸ்' பிராண்டின் கீழ் 2,000 அறைகளை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

கிளாசிக் லெஜெண்ட்ஸ்: நிறுவனத்தில் மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனம் 60 சதவீத பங்குகளை வைத்துள்ளது. ஜாவா, யெஸ்டி மற்றும் பிஎஸ்ஏ போன்ற பாரம்பரிய பைக் பிராண்டுகளை மீண்டும் உயிர்ப்பித்து வருகிறது.

சஸ்டென்: மஹிந்திரா குழுமத்தின் கிளீன் எனர்ஜி பிரிவில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் முழுமையான சூரிய மின்சக்தி தீர்வுகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், மின் உற்பத்தியையும் மேற்கொள்கிறது.

மஹிந்திரா லைப் ஸ்பேசஸ்: ரியல் எஸ்டேட் பிரிவில் இயங்கி வருகிறது. இந்தியாவில் 100 சதவீத பசுமை சான்றிதழ் பெற்ற கட்டடங்களை உருவாக்குவதாக உறுதியளித்த முதல் நிறுவனங்களில் இதுவும் ஒன்று.

மஹிந்திரா ஏரோஸ்பேஸ்: பயன்பாட்டு விமானங்கள் மற்றும் உலகளாவிய விண்வெளி நிறுவனங்களுக்கான விமான கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது.

மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ்: மூன்றாம் தரப்பு தளவாட சேவைகளை வழங்கும் இந்நிறுவனம், வினியோக மேலாண்மை, கிடங்கு மற்றும் சரக்கு அனுப்புதல் போன்ற சேவைகளை வழங்குகிறது.

மூலதன ஒதுக்கீடு லாபமற்ற மற்றும் முக்கியமற்ற 15 நிறுவனங்களில் (சாங்யோங், ஜென்ஸி போன்றவை) இருந்து வெளியேறி, தேவையற்ற நஷ்டத்தை குறைத்தது.

ஒவ்வொரு துணை நிறுவனமும் குறைந்தபட்சம், 18 சதவீத பங்கு மூலதன ஆதாயத்தை வழங்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த இலக்கை எட்டாத வணிகங்களில் இருந்து வெளியேறுவது குறித்து குழுமம் பரிசீலிக்கும். அதிக வளர்ச்சி வாய்ப்பு உள்ள 'குரோத் ஜெம்ஸ்' மற்றும் மின்சார வாகன துறையில் அதிக முதலீடுகள் குவிக்கப்பட்டுள்ளன.

எதிர்கால திட்டங்கள் உலகின் அதிவேகமாக வளரும் எஸ்.யு.வி., பிராண்டாக மாற இலக்கு. 2025ல் அறிமுகப்படுத்தப்பட்ட 'என்.யு. ஐ.க்யூ' தளம் வாயிலாக ஐரோப்பா மற்றும் தென் ஆப்ரிக்க சந்தைகளில் நுழைய திட்டம். 2030க்குள் வாகன துறையில் 20 சதவீத வருவாய் வளர்ச்சியை எதிர்பார்க்கிறது.

'லாஸ்ட் மைல் மொபிலிட்டி' பிரிவில் 2031க்குள் 10 லட்சம் மின்சார வாகனங்களை விற்பனை செய்யவும், 2030க்குள் 50 சதவீத தயாரிப்புகளை மின்மயமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


கடன் சுமை இல்லாத நிதி நிலை, மின்சார வாகனங்கள் மற்றும் பண்ணை இயந்திரமயமாக்கல் ஆகியவற்றில் நிறுவனம் காட்டும் வேகமே அதன் தொடர்ச்சியான வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும்.




பொறுப்பு துறப்பு இந்த அறிக்கை முதலீட்டு பரிந்துரை அல்ல. நாங்களோ எங்கள் வாடிக்கையாளர்களோ இந்த பங்குகளை வைத்திருக்கலாம், வாங்கிக்கொண்டு இருக்கலாம் அல்லது விற்றுக்கொண்டு இருக்கலாம் என்பதை உங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

Advertisement